புதுச்சேரி லாஸ்பேட்டை கிருஷ்ணா நகர் 16 வது குறுக்கு தெருவில் உள்ளது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த புத்தாண்டு இரவு அன்று அடுக்குமாடி குடியிருப்பு வாகன நிறுத்துமிடத்தில் இருந்து புகை கிளம்பிதை கண்டு  அங்கு சென்று பார்த்த குடியிருப்பு வாசி ஒருவர் அங்கிருந்த இருசக்கர வாகனங்கள் தீயில் எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து கொண்டு இருந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தில் சத்தம் கொடுத்து அனைவரையும் அழைத்துள்ளார்.


உடனடியாக இந்த சம்பவம் குறித்து லாஸ்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் விரைந்து தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் அங்கு வாகனங்களில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  ஆனால் அவர்கள் வருவதற்குள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் முற்றிலுமாக தீயில் கருகி சேதம் அடைந்தது. இருப்பினும் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்ததால் பெரும் தீ விபத்து அந்த குடியிருப்பில் தவிர்க்கப்பட்டது.


அடுக்குமாடி குடியிருப்புச் செயலாளர் மணிகண்டன் 8 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்தது குறித்து  காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் நேற்று மாலை  வழக்கு பதிவு செய்து,  இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் யாரேனும் தீயிட்டு கொளுத்தி உள்ளார்களா அல்லது இருசக்கர வாகனத்தில் ஏதேனும் வையர்களில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் முற்றிலுமாக சேதம் அடைந்த சம்பவம் குடியிருப்பு வாசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.