சேலம் மத்திய சிறையில் 1200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஜாமீனில் வெளியே செல்லும் கைதிகளின் பின்புலம் குறித்து உளவுப் பிரிவினர் ரகசியமாக கண்காணிப்பார்கள். கைதி ரவுடியாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் வெளியே செல்லும்போது அந்தந்த காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள். அவர்கள் வாரன்ட் இருந்தால் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் கைது செய்வார்கள். அதே போல தொடர்ந்து திருட்டு வழக்கில் ஈடுபடும் நபர்களையும் இவ்வாறு கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவார்கள். இவ்வாறு வழிப்பறி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிவகங்கை மாவட்டம் சிவகாஞ்சி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது வாரன்ட் இருப்பதையடுத்து தனிப்படையினர் அவரை கைது செய்ய 3 நாட்களுக்கு முன்பே சேலம் மத்திய சிறைக்கு வந்தனர். 



வழக்கமாக சிறையின் நுழைவாயில் அருகில் உள்ள மரத்தடியில் நிற்பார்கள், உள்ளே இருந்து வெளியே வரும்போது அவர்களை கைது செய்து அழைத்துச் செல்வது வழக்கம். அதன்படி சிவகங்கை தனிப்படையினர் ரவுடிக்காக காத்திருந்தனர். அப்போது சிறை அதிகாரி ஒருவர், அங்கிருந்த தனிப்படையினரிடம், இங்கு வைத்து யாரையும் கைது செய்யக்கூடாது, ரோட்டுக்கு வெளியே நில்லுங்கள் என்று கூறி அனுப்பினார்.


இதையடுத்து தனிப்படை காவல்துறையினர் ரோட்டுக்கு வெளியே காத்திருந்தனர். காலை 11 மணியில் இருந்து 2 மணி வரை காத்திருந்தும் ஒரே ஒரு முதியவர் மட்டுமே சிறையிலிருந்து வெளியே வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த தனிப்படை காவல்துறையினர், சிறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, தனிப்படையினர் தேடி வந்த ரவுடி 11.30 மணிக்கே சென்றுவிட்டாரே என தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த தனிப்படை காவல்துறையினர், சிறையில் இருந்து வெளியே வருவதற்கு ஒரே பாதைதான் இருக்கிறது. இந்தவழியாக செல்லவில்லையே என கேட்டுள்ளனர்.


தொடர் விசாரணையில் சிறை அதிகாரிகள் ரவுடியை வேறு வழியாக தப்பிக்க வைத்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். வழக்கமாக மெயின் கேட் வழியாக கைதிகள் வெளியே வருவார்கள். ஆனால் இந்த ரவுடிக்கு மட்டும் சிறை காம்பவுண்ட்சுவரில் இருக்கும் கேன்டீன் ஷட்டரை திறந்து வெளியே அனுப்பியது தெரியவந்துள்ளது. கைதியுடன் சிறை அதிகாரிகளுக்கு இருக்கும் தொடர்பை கண்டு தனிப்படை காவல்துறையினர் கடும் அதிர்ச்சியுடன் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


இதுகுறித்து உளவுப் பிரிவினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ரவுடியை ரகசியமாக வெளியே அனுப்பியதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் சேலம் மத்திய சிறை வார்டன்கள் ரமேஷ், பூபதி ஆகியோரை சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.