Crime : தெலங்கானாவில் கோயில் பூசாரி ஒருவர், காதலியை கொலை செய்து அவரது உடலை கழிவுநீர் தொட்டியில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


பெண்ணுடன் பழக்கம்


தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஷரூர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாய் கிருஷ்ணா (36). இவர் அதே பகுதியில் உள்ள பங்காரு மைசம்மா கோயிலில் பூசாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் பணியாற்றிய கோயிலுக்கு நற்குடா கிராமத்தைச் சர்ந்த அப்சரா (30) என்ற பெண் வழக்கமாக சாமி கும்மிட வந்துள்ளார்.


அப்போது அப்சராவுக்கும் கோயில் பூசாரியான கிருஷ்ணாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் நெருக்கமாக சில நாட்களாக பழகி வந்துள்ளனர்.  இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் காதலாக மாறியது. இதற்கிடையில் அப்சரா கர்ப்பமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, சாய் கிருஷ்ணாவின் கட்டாயத்தின் பேரில் அப்சரா கர்ப்பத்தை கலைத்துள்ளதாக தெரிகிறது.


திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி


இந்நிலையில், சாய் கிருஷ்ணா தன்னை ஏமாற்றுவதாக நினைத்து அப்சரா தன்னை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் பூசாரி கிருஷ்ணாவுக்கு இதில் விருப்பம் இல்லாமல் மறுப்பு தெரிவித்திருந்தார். இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.


இப்படி இருக்கும் நிலையில், ஒரு நாள் சந்திப்பின்போது மீண்டும் அப்சரா திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பூசாரி சாய் கிருஷ்ணா அப்சராவை கடுமையாக அடித்து உள்ளார். இதனால் அப்சரா உயிரிழந்துள்ளதால் அதனை மறைக்க அப்சராவின் உடலை சரூர் நகருக்கு எடுத்து சென்று கழிவு நீர்த் தொட்டியில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். பின்னர், இது பற்றி எதுவும் தெரியாதது போல் இருந்துள்ளார். 


கைது


இதனை அடுத்து, மகளை காணவில்லை என்று அப்சராவின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை கொடுக்கும்போது சாய் கிருஷ்ணா உடனிருந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் பூசாரி கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அப்சராவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.


பின்னர், சாய் கிருஷ்ணா கொடுத்த தகவலின்பேரில் அப்சராவின் உடலை போலீசார் கைப்பற்றி, அவரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ”சாய் கிருஷ்ணாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருப்பினும் அப்சராவுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். சாய் கிருஷ்ணாவின் வாக்குமூலத்தின்படி அப்சரா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். எனவே, சாய் கிருஷ்ணா அவளை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.


மேலும், ஷாம்ஷாபாத்தில் அப்சராவைக் கொன்று, பின்னர் சரூர்நகருக்கு கொண்டு செல்வதற்கு முன்பு அவரது உடலை பிளாஸ்டிக் கவரில் அடைத்துள்ளார். அவர் பூசாரியாக பணியாற்றிய அதே கோவிலுக்கு அருகாமையில் உள்ள எம்ஆர்ஓ அலுவலகத்தின் பின்புறமுள்ள கழிவுநீர் தொட்டியில் உடலை வீசியுள்ளதாக” போலீசார் தெரிவித்தனர்.