விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மண்டகமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் சந்தியா (வயது 23). இவருக்கும் முகையூர் ஒன்றியம் சத்தியகண்டனூர் கிராமத்தை சேர்ந்த திருமலை என்பவருக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஹனிஷ்கா 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.


இந்நிலையில் தற்போது, சந்தியா 4 மாதம் கர்ப்பமாக இருந்தார். நேற்று முன்தினம் தனது தாய் வீடான மண்டகமேடு கிராமத்திற்கு சென்றார். அங்கு தங்கியிருந்த போது இரவு 12 மணியளவில் அவருக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை பாவந்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அவரது உடல்நிலை சரியாகாத காரணத்தினால், மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல செவிலியர்கள் பரிந்துரைத்தனர். ஆனால், அவரை அழைத்து செல்வதற்கான ஆம்புலன்ஸ் வசதி அங்கு இல்லை. இதையடுத்து 12.20 மணிக்கு மேல் 108 ஆம்புலன்சுக்கு சந்தியாவின் குடும்பத்தினர் தகவல் தெரிவித்தும் உடனடியாக வரவில்லை.


இரவு 2.30 மணி வரைக்கும் ஆம்புலன்ஸ் வராத காரணத்தினால், சந்தியா உரிய சிகிச்சை கிடைக்காமல் பாவந்தூர் ஆரம்ப சுகதார நிலையத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இந்நிலையில், 2.30 மணிக்கு பின்னர் அங்கு ஆம்புலன்ஸ் வந்தது. தொடர்ந்து அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சந்தியாவை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும், குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து, கதறி அழுதனர். இதுகுறித்து அவரது தாய் சுமதி (45) கொடுத்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். இந்த சம்பவம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண