பணியை விட்டுவிட்டு பள்ளிக் கல்வித்துறையில் பணி

 

காஞ்சிபுரம், ஏனாத்தூர் புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் சகாயபாரத். இவர் மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலராக பணி செய்து வருகிறார். இவரது மனைவி சௌமியா, இவரது தம்பி ஆரோக்கிய அருண் போக்குவரத்து காவலராக காஞ்சிபுரத்தில் பணி புரிகிறார். மற்றொரு தம்பி இருதயராஜ் காவல் பணியில் இருந்தவர். அவர் அந்தப் பணியை விட்டுவிட்டு பள்ளிக் கல்வித்துறையில் பணி செய்கிறார். இவர்களது தந்தை ஜோசப், தாயார் மரியச்செல்வி

 

40 கோடி அளவுக்கு முதலீடு திரட்டி

 

இவர்கள் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்வது, பெரு நிறுவனங்களின் விற்பனை உரிமை எடுப்பது, பல்வேறு தொழில்களில் ஈடுபடுவதாகவும், இதன் மூலம் அதிக லாபம் ஈட்டலாம் என்றும் கூறியுள்ளனர். இதுபோல் போலீஸார் மற்றும் பொதுமக்களிடம் கூறி அவர்களிடம் இருந்து ரூ.40 கோடி அளவுக்கு முதலீடு திரட்டி மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்ததைத் தொடர்ந்து காஞ்சிபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக சகாயபாரத், அவரது மனைவி சௌமியா, இருதயராஜ் அவரது மனைவி ஜெயஸ்ரீ, இவர்களின் தாயார் மரியச்செல்வி ஆகிய 5 பேரை நேற்று போலீஸார் கைது செய்தனர். 

 


 

8 பேர் கைது

 

போக்குவரத்து காவலர் அருண், அவரது மனைவி மகாலட்சுமி, தந்தை ஜோசப் ஆகியோர் தலைமறைவாகினர். அவர்களை போலீஸார் தேடி வந்த நிலையில் அவர்கள் மூவரையும் இன்று  கைது செய்தனர். நிதி மோசடி வழக்கில் போலீஸார் குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்ட சமம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரிடம் கேட்டபோது முதல் கட்ட விசாரணையை நாங்கள் செய்து வருகிறோம். இதன் பின்னர் இது பொருளாதார குற்றப் பிரிவு போலீஸருக்கு மாற்றப்படும் என்றார்.

 

கைதான இரு காவலர்கள் பணியிடை நீக்கம்

 

காஞ்சிபுரத்தில் பல்வேறு நபர்களிடம் வர்த்தகத்தில் பணம் முதலீடு செய்வதாக கூறி 40 கோடி வரை பணம் பெற்ற காஞ்சிபுரத்தை சேர்ந்த மாமல்லபுரம் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலராக பணி புரிந்து வந்த  சகாயபாரத், போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வந்த ஆரோக்கிய அருண் ஆகியோர் பணியிடை நீக்கப்பட்டதாகவும், பள்ளிக்கல்வி துறையில் பணியாற்றி வரும் குற்றவாளி இருதயராஜ் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி எழுத்துப்பூர்வமாக பரிந்துரை செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தகவல் தெரிவித்துள்ளார்.

 

ஏற்கனவே ஐ.பி.எஸ். ஆருத்ரா கோல்ட் போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்து பலர் தங்கள் பணத்தை இழந்துள்ள நிலையில் தற்போது இவர்களிடமும் பலர் பணத்தை இழந்துள்ளனர். இவர்கள் போலீஸாராக இருப்பதால் காவல்துறையில் பணி செய்யும் பலர் இவர்களிடம் பணத்தை முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.