மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தில்லையாடி பெரியமேட்டுப்பாளையம் தெருவை சேர்ந்த உத்திராபதி என்பவரின் மகள் 28 வயதான புஷ்பாதேவி. இவருக்கும் பூம்புகார் சாயானவனம் தெற்குவீதியை சேர்ந்த கோயில் சிலை வடிக்கும் ஸ்தபதி வேலை செய்யும் 31 வயதான கார்த்தி  என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 23 -ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. 




திருமணத்திற்கு 12  சவரன் தங்க நகை போடுவதாக பேசியுள்ளனர். அந்தநேரத்தில் முடியாததால் 9 சவரன் நகையும், இருசக்கர வாகனம்  வாங்குவதற்கு 50 ஆயிரம் ரூபாய் பணம், தேக்குகட்டில் மற்றும் சீர்வரிசை பொருட்களுடன் புஷ்பாதேவிக்கு திருமணம் செய்துவைத்துள்ளனர். இந்நிலையில் 6  மாதம் கர்ப்பினியாக உள்ள புஷ்பாதேவி நேற்று மாலை வீட்டின் பின்புறம் கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோருக்கு கார்த்தி குடும்பத்தினர் தகவல் அளித்துள்ளனர்.  




இதனை கேட்ட அதிர்ச்சி அடைந்த  அவரது தந்தை உத்திராபதி மற்றும் உறவினர்கள் உடனடியாக சென்று பார்த்தபோது புஷ்பாதேவி கழுத்தில் காயங்கள் இருந்ததாகவும், மகளை திருமணம் செய்ததிலிருந்து மீதி நகையை கேட்டு அவரது மாமியார் அகிலா, கணவரின் சகோதரி கவிதா, கணவன் கார்த்தி உள்ளிட்ட குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்ததாகவும், தங்கள் மகளிடம் செல்போனில் பேசக்கூட அனுமதிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.




மேலும் அவர்கள் கூறுகையில், 6 மாதம் கர்ப்பினியாக உள்ள தங்கள் மகள் புஷ்பாதேவி இறப்பில் மர்மம் உள்ளதாகவும், நடவடிக்கை எடுக்ககோரி  பூம்புகார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். திருமணமாகி 7 மாதமே ஆவதால் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா தனிவிசாரணை மேற்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இறந்த புஷ்பாதேவி குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.




இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும். 




சீர்காழியில் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட இளைஞர்கள்


சீர்காழியில் செவிலியரின் ஏடிஎம் கார்டை திருடி நிதானமாக நகை கடைக்கு சென்று நகைகளை வாங்கி கொண்டு செல்லும் இளைஞரின் சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.




மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆரப்பள்ளம் கிராமம் புது தெருவை சேர்ந்தவர் 57 வயதான ஆனந்தநாயகி. இவர் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம்மில் தனது ஏடிஎம் கார்டை பயன்படுத்தி  20 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்க முற்பட்டுள்ளார். அப்பொழுது ஏடிஎம்மில் பணம் எடுக்க  ஆனந்தநாயகி செல்லிற்கு வந்த ஒடிபி நம்பரை பார்த்துள்ளார். 




அனந்தநாயகி செல்போனை பார்த்துக் கொண்டிருந்த பொழுது பின்னால் நின்ற இரண்டு அடையாளம் தெரியாத வாலிபர்கள் அனந்தநாயகியிடம் பேச்சி கொடுத்து திசை திருப்பி ஆனந்த நாயகியின் ஏடிஎம் கார்டு எடுத்துக் கொண்டு தங்கள் கையில் இருந்த வேறொரு ஏடிஎம் கார்டை சொருகி விட்டு அங்கிருந்து தலைமறைவாகிவிட்டனர். இதனை தொடர்ந்து அனந்தநாயகி அருகிலுள்ள வங்கிற்கு சென்று தனது கணக்கில் பணம் உள்ளது. ஆனால் ஏடிஎம்மில் பணம் வரவில்லை என்ற விவரங்களை கேட்டுக் கொண்டிருந்த பொழுது  ஏடிஎம் கார்டை திருடி சென்ற இளைஞர் சீர்காழி கடைவீதி நாகேஸ்வரமுடையார் கோவில் அருகில் உள்ள ஒரு பிரபல நகைக்கடைக்கு சென்று செவிலியரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி 60,000 ரூபாய்க்கு நகைகள் எடுத்துக்கொண்டு, பின்னர் சிதம்பரம் சாலையில் உள்ள ஒரு தனியார் ஏடிஎம்மில் 36,000 ரூபாய் எடுத்ததற்கான செல் போனுக்கு குறுச்செய்தி வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அனந்தநாயகி இதுகுறித்து சீர்காழி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சீர்காழி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவி உதவியுடன் அனந்தநாயகி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தை எடுத்த இளைஞர்களை தேடி வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண