Pondicherry Police Forgery:

  


காவல் துறையினர் லஞ்சம் வசூலிப்பதற்கு எதிராக எவ்வளவுதான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் காவல்துறையினர் அதனை விடுவதாக இல்லை. முன்பெல்லாம் லஞ்சத்தை நேரடியாக தாங்களே பெற்று வந்த நிலையில், லஞ்ச தடுப்பு பிரிவின் நடவடிக்கைகள் வேகமெடுத்ததால் காவல் துறையில் சிலர் தாங்கள் லஞ்சம் வசூலிக்கும் முறையை வேறு விதமாக மாற்றிவிட்டனர்.


பொதுவாகவே காவல்துறையினர் லஞ்சம் அதிகம் பெறும் இடங்களில் ஒன்று சாலையில்தான். மெட்ரோ நகரங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் சட்டம் - ஒழுங்கு காவல்துறையினர்தான் போக்குவரத்து காவலர்களைப் போல், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்களை சோதனை செய்கின்றனர்.


ஹெல்மெட் போடாத, இன்சுரன்ஸ் இல்லாத அல்லது வேறு எதாவது போக்குவரத்து விதிகளை மீறினால் அவர்களிடம் அபராதம் வசூலிப்பது போன்ற நடவடிக்கைகள் நடைபெறுவது வழக்கம்தான். அதேநேரத்தில் காவல் துறையினர் வழக்கு போன்ற வார்த்தைகளை பயன்படுத்தினால் பொதுமக்கள் பயந்து விடுவதால், காவல்துறையினருக்கு அபராதம் என்ற பெயரில் லஞ்சத்தை கொடுத்துவிட்டு, நம்மள விட்டா போதும் என அங்கிருந்து தப்பித்துவிடுகின்றனர். 


காவல் துறையினர் சிலர் இப்போதும் வாகனங்களை மறித்து சோதனையிடும்போது லஞ்சம் பெற்றால் அதனை அருகில் தங்களுக்கு வேண்டப்பட்ட நபரை நிறுத்தி வைத்துவிட்டு அவர்களிடம் பணத்தை கொடுத்துவிட்டு வா, வண்டி சாவியைத் தருகிறேன் என கூறுவது இன்றைக்கும் ஆங்காங்கு மெட்ரோ நகரங்களில் கூட பார்க்க முடியும். ஆனால் பாண்டிச்சேரியில் இதனை எல்லாம் ஓவர்-டேக் செய்யும் சம்பவம் நடைபெற்றுள்ளது. 


அதாவது பாண்டிச்சேரிக்கு கடந்த மே மாதம் 9ஆம் தேதி குடும்பத்துடன் காரில் சுற்றுலா சென்ற முரளிதரனிடம் ரூபாய் 500 அபராதமாக வசூல் செய்துள்ளது பாண்டி காவல்துறை. அபராதத்தை கூகுள் பே மூலம் செலுத்தி விட்டு வந்திருக்கிறார் முரளிதரன். அபராதத்தை வசூல் செய்துகொண்டு ரசீது தராததால் சந்தேகமடைந்தவர், பாண்டிச்சேரி உயர் காவல் அதிகாரிகளிடத்தில் புகார் அளித்துள்ளார். இதனை விசாரித்த உயர் அதிகாரிகள், கூகுள் பே அக்கவுண்ட் யாருடையது என்பதைக் கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட அதிகாரியையும் கண்டுபிடித்துவிட்டனர். 


இந்நிலையில், லஞ்சம் பெற்ற அதிகாரிக்கு துறை ரீதியான நோட்டீஸ் வழங்கி விசாரணை நடத்தி வருகிறது பாண்டி காவல். இந்த சம்பவம் நடைபெற்று இரண்டு மாதங்கள் ஆனாலும், இப்போதுதான் வெளிவந்துள்ளதால், பாண்டி மட்டும் இல்லாது தமிழ்நாட்டிலும், இதுதான் பேச்சாக உள்ளது. அதில் சிலர் லஞ்சம் எப்படி எல்லாம் வசூலிக்கிறார்கள் பாருங்களேன் எனவும் இவங்க எல்லாம் திருந்தவே மாட்டாங்க என சிலரும்,  என்னதான் லஞ்சம் வாங்கினாலும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது என ஒரு சிலரும் கூறிவருகிறனர்.