பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்களை கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர்களின் உறவினர்கள் பார்க்க அனுமதித்ததின் பின்னணி வெளியாகியுள்ளது.


மட்டன் பிரியாணி தான் அந்த முக்கியக் காரணமாம். மாசக் கணக்கில் மட்டன் பிரியாணி சாப்பிடாத பொள்ளாச்சிவன்கொடுமை வழக்கு கைதிகள் நாக்கு செத்துப்போய் கிடந்ததால் கிடாயை வெட்டி வீட்டிலேயே பிரியாணி சமைத்து துரத்தி துரத்திக் கொண்டுவந்து கொடுத்துள்ளனர் உறவினர்கள். 


பதறவைத்த பொள்ளாச்சி வழக்கு:


பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழக மக்களையே அதிர்ச்சியில் உறைய வைத்தது. அண்ணா விட்டுடங்க அண்ணா என்று கெஞ்சிய அந்த இளம் பெண்ணின் குரல் எல்லோரையும் நடுநடுங்க வைத்தது. அதிமுகவின் அதி பலமிக்க பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பெயரெல்லாம் இந்த வழக்கில் அடிபட்டு பரபரப்பைக் கிளப்பியது. பின்னர் இந்த வழக்கில்  9 பேரை போலீஸார் கைது செய்தனர். கைதானவர்கள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.  


இந்நிலையில் தான் கைதிகளை கோவைக்கு அழைத்துச் சென்று விட்டு திரும்பும் வழியில் போலீஸார் கைதிகளின் உறவினர்களை சந்திக்க அனுமதி வழங்கிய சர்ச்சையில் சிக்கினர் போலீஸார்.


கடந்த அக்டோபர் 20 ஆம் தேதியன்று பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பந்தப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வசந்தகுமார், திருநாவுக்கரசு, மணிவண்ணன், சதீஷ் மற்றும் சபரிராஜன் ஆகியோரை ஆம் தேதி கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு போலீஸார் சேலம் திரும்பினர். 
வரும் வழியில் விதிமுறைகளை மீறி கைதிகளை, அவர்களின் உறவினர்களை சந்திக்க அனுமதித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. 




இதனையடுத்து கைதிகளை அழைத்து சென்ற போலீஸார் ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம், போலீஸ்காரர்கள் பிரபு, வேல்குமார். ராஜ்குமார், நடராஜன், ராஜேஷ்குமார், கார்த்தி ஏழு பேரை சேலம் மாநகர காவல் ஆணையாளர்  நஜ்மல்  ஹோடா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. சம்பந்தப்பட்டவர்களிடம் நடந்த விசாரணையில், பொள்ளாச்சி சம்பவத்தில் கைதானவர்களின் உறவினர்கள் வீட்டிலிருந்து சமைத்துக் கொண்டு வந்த மட்டன் பிரியாணியை எப்படியாவது கொடுக்க வேண்டும் என நச்சரித்தனர்.


ஆனால் நாங்கள் சம்மதிக்கவில்லை. பின்னர் ரொம்பவே நச்சரித்தனர். வழியில் ஓரிடத்தில் நிறுத்துவோம் பார்சலைக் கொடுங்கள் என்றோம். அப்படி நிறுத்தியபோது பார்சலைக் கொடுத்தனர்.


வெறும் 7 நிமிடங்கள் வாகனம் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் கைதிகளை சிறைக்கு கொண்டுவந்து விட்டோம் என்று கூறியுள்ளனர். பிரியாணிக்கு சபலப்பட்டு சஸ்பெண்ட் ஆனதால் இப்போது சங்கடத்தில் உள்ளனராம்.