செங்கல்பட்டு அருகே உடல் நலம் பாதித்த தாயை பார்த்து விட்டு வேலைக்கு சென்ற உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில்

 

கடலூர் மாவட்டம் மஞ்ச கொள்ளை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (46). இவருக்கு திருமணமாகி பத்மா (40) என்கிற மனைவியும், தர்மா (17) ஹரிஷ் (7) என இரு மகன்கள் உள்ளனர். வெங்கடேசன் ஆலந்தூரில் உள்ள காவலர் குடியிருப்பில் தனது குடும்பத்துடன் தங்கி இருந்து தி.நகர் போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் வெங்கடேசன் தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை பார்ப்பதற்காக கடலூர் சென்று விட்டு மீண்டும் இன்று அதிகாலை சென்னை நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது செங்கல்பட்டு புறவழி சாலையில் வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டார். 

 

சம்பவ இடத்திலேயே

 

இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு நகர போலீசார் வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.