கடலூரில் மகளிர் கல்லூரி கழிவறையில் மாணவி தற்கொலை செய்துகொண்டார். கடலூர் செம்மண்டலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மகளிர் கலைக்கல்லூரி உள்ளது. இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் 2 வகுப்புகள் நடைபெறுகிறது. இந்த கல்லூரியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்துவருகின்றனர். நேற்று வழக்கம் போல் கல்லூரிக்கு மாணவிகள் வந்தனர். கழிவறைக்கு சென்ற போது அங்கு ஒரு மாணவி துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


இதனால் பேராசிரியர்களும் திரண்டனர். இதுபற்றி கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில் அந்த மாணவியின் பெயர் தனலட்சுமி (வயது 19), பி.காம். முதலாமாண்டு படித்து வந்தது தெரியவந்தது. இவர் விழுப்புரம் அருகே உள்ள சின்னபாபு சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த நாகலிங்கம் என்பவரின் மகள் ஆவார். இவர் விடுதியில் தங்கி கல்லூரியில் படித்து வந்தார். இவர் கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.




கடிதத்தில் கூறியிருப்பதாவது:-


”தம்பி சத்தி நல்லா படிடா, அப்பா அம்மாவ பாத்துக்கோ யாரையும் நம்பாதிங்க, இது போலியான உலகம், நான் தேர்வில் தோல்வி அடைந்து விடுவேனோ என பயமா இருக்கு, நான் இறந்துவிட்டால் என்.சி.சி. யூனிபாமை எனக்கு போடுங்க, எனது அக்கவுண்டில் ரூ.6 ஆயிரம் இருக்கு அதில் வாட்ச் வாங்கிக்கங்க, அப்பா, அம்மாவ எதிர்த்து பேசக்கூடாது” - இந்த கடிதத்தை படித்துவிட்டு கிழித்து போட்டுவிடுங்க என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி மாணவி தனலட்சுமி எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Suicidal Trigger Warning


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060).