சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் பகுதியை சேர்ந்தவர் மணி(27). இவரது சகோதரர் தினேஷுடன் சேர்ந்து மணி வள்ளுவர் கோட்டம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள நடைமேடையில் காய்கறி மற்றும் பழங்கள் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களது கடையில் புஷ்பா நகரைச் சேர்ந்த வீராசாமி என்பவர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக கோயம்பேடு மொத்த சந்தையில் தினேஷ் மற்றும் மணி ஆகியோர் சென்று காய்கறிகள் பழங்கள் வாங்கும் போது பலமுறை இவர்கள் கொடுக்கும் பணத்தில் கள்ள நோட்டுகள் இருந்துள்ளது. இதனால் கோயம்பேடு மொத்த வியாபாரிகள் கள்ள நோட்டுகளை கண்டுபிடித்து, அவற்றை தினேஷ் மற்றும் மணியிடம் திரும்ப கொடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும்  மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் போது கள்ளநோட்டுகளை கொடுத்து சிலர் காய்கறிகள் வாங்கி செல்வதை கண்டுபிடித்துள்ளனர்.




இதையடுத்து வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்கும்போது ஒரு முறைக்கு இருமுறை நல்ல நோட்டு தானா என்பதை கவனித்து வாங்குங்கள் என கோயம்பேடு மொத்த வியாபாரிகள் அறிவுரை கூறியுள்ளனர்.அடிக்கடி கள்ள நோட்டுகளை கொடுத்து ஏமாற்றி காய்கறிகளை வாங்கிச் செல்பவர்களால், தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதால் தினேஷ் மற்றும் மணி ஆகிய இருவரும் மன வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு வழக்கம்போல வியாபாரம் பரபரப்பாக நடந்து கொண்டிருந்த சமயத்தில் இவர்களது கடைக்கு வந்த ஒரு முதியவர் 670 ரூபாய்க்கு காய்கறி, பழங்கள் வாங்கிவிட்டு, மூன்று புதிய 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளார். மேலும் 670 ரூபாய் போக மீதி தொகையும், ஒரு 500 ரூபாய் நோட்டுக்கு சில்லறையும் கேட்டுள்ளார்.


ரூபாய் நோட்டுகளை பார்த்து சந்தேகம் அடைந்த கடை ஊழியர் வீராசாமி, உடனடியாக கடை உரிமையாளர் தினேஷிடம் முதியவர் கொடுத்த ரூபாய் நோட்டுகளை காண்பித்தார். அப்போது அவை கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்ததையடுத்து நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தினேஷ் தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற முதியவரை கைது செய்தனர்.




அவரிடம் நடத்திய விசாரணையில் பள்ளிக்கரணையை சேர்ந்த அண்ணாமலை( வயது 64) என்பதும் முன்னாள் ராணுவ வீரர் என்பதும் தெரிய வந்தது. அவர் கொடுத்த தகவலின் பெயரில் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றும் சுப்பிரமணியன்(62) என்பவரை போலீசார் கைது செய்தனர். சுப்ரமணியனின் வீட்டிலிருந்து ஒரு கட்டிங் மெஷின் ,ஒரு கவுண்டிங் மெஷின், 45 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் ஆகியவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்களிடம் நடத்திய விசாரணையில் கோடீஸ்வரன் என்ற பெயரில் பிரமாண்டமாக விளம்பர படம் எடுக்க இருப்பதாகவும், அதற்கு கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகள் அடித்து தர வேண்டும் எனக்கூறி கடந்த மாதம் வடபழனி கங்கையம்மன் கோவில் தெருவில் உள்ள வி.கே.ஆர் பிரஸ்ஸில் 90 கட்டு 500 ரூபாய் என மொத்தம் 50 லட்சம் கள்ள நோட்டுகள் அச்சடித்ததாக தெரிவித்துள்ளனர். 


4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை கடந்த ஐந்து மாதமாக புழக்கத்தில் விட்டது தெரியவந்துள்ளது. சிறு சிறு வியாபாரிகளிடம் இந்த கள்ள நோட்டை கைமாற்றியுள்ளனர். வழக்கறிஞர் சுப்பிரமணியன் தனது வீட்டின் படுக்கை அறையில் ரகசியமாக பதுக்கி வைத்திருந்துள்ளார்.




இவர்களுக்கு ரூபாய் நோட்டுகளை அச்சடித்து கொடுத்த கார்த்திகேயன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்கள் கள்ள நோட்டுகளை சென்னை முழுவதும் புழக்கத்தில் விட்டுள்ளனரா? எவ்வளவு ஆண்டுகளாக கள்ள நோட்டுகளை மாற்றி வருகின்றனர் என்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த புகாரில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


மேலும் 2000 ரூபாய் நோட்டுகளையும் அச்சடித்தார்களா எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திருவல்லிக்கேணி துணை ஆணையர் சேகர் தேஷ்முக், நேற்று மாலை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் காய்கறி கடை உரிமையாளர் மணி என்பவர் ஒருவர் 4 கள்ள நோட்டுகள் கொண்டு வந்து காய்கறி வாங்க வந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.




மணி கொடுத்த புகாரின் பேரில் கள்ள நோட்டு வைத்திருந்த அண்ணாமலை என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, கள்ள நோட்டை கொடுத்தவர் விருகம்பாக்கத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பது தெரியவந்ததையடுத்து அவரை கைது செய்து, அவரது வீட்டை சோதனை செய்த போது, 90 பண்டல்களில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் என 45 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.  அதுமட்டுமின்றி பிரிண்டிங் மிஷின், பேப்பர் கட்டிங் மிஷின்  பறிமுதல் செய்யப்பட்டது.


இவர்களிடம் நடத்திய புலன் விசாரணையில் இவர்கள் 5 மாதம் முன்பு வடபழனியில் உள்ள ஒரு பிரஸ்ஸில் 50 லட்சம் கள்ள நோட்டை அச்சடித்தது தெரியவந்தது. பின்னர் சுப்பிரமணி அவரது நண்பரான அண்ணாமலையிடம் கள்ள நோட்டை கொடுத்து, 5 முறை காய்கறி வாங்கியதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். மேலும் அண்ணாமலை முன்னாள் ராணுவ வீரர் எனவும் சுப்பிரமணி வழக்கறிஞராகவும் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். இவர்கள் ஒரிஜினல் நோட்டு போல பிரிண்டிங் செய்து புழக்கத்தில் விட்டது தெரியவந்துள்ளது.


பொதுமக்கள் பணநோட்டுகளை பெறும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் நோட்டின் மீது சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக வங்கியில் சரிப்பார்த்து கொள்ளலாம் அல்லது காவல்துறையில் உடனடியாக புகார் அளிக்கலாம் என கூறினார். இந்த கள்ள நோட்டு புழக்கம் என்பது மிகப்பெரிய குற்றம் எனவும் பொதுமக்கள் தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கூறினார்.