RBI: வங்கிகள் கடன்களுக்காக விதிக்கும் அபராத வட்டி விதிப்பை ரிசர்வ் வங்கி தடை செய்து அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பும் அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும்.


வங்கிக் கடன்:


அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்காக பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் கடன் பெறுவது என்பது இன்று சர்வ சாதாரணமாகிவிட்டது. பொதுமக்களின் தேவைகளை உணர்ந்து தனிநபர் கடன், வீட்டு கடன், கார் கடன் என பல்வேறு பிரிவுகளில் வங்கிகள் கடன்களை வழங்கி வருகின்றன. வட்டியுடன் சேர்த்து ஒவ்வொரு மாதமும் செலுத்தும் சந்தாவை முறையாக செலுத்திவிட்டால், எந்த பிரச்னையும் இருக்காது. ஆனால், கடன்களுக்கான விதிமுறைகளை வாடிக்கையாளர்கள் முறையாக பின்பற்றவில்லை என்றால், அந்த கடன் தொகை மீது அபராத வட்டி விதித்து, அதை வட்டியோடு சேர்த்து விடுகின்றன.  இதனை தடுப்பதற்காக ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிளுக்கும் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. 


ரிசர்வ் வங்கி அறிவிப்பு:


இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில்,



  • கடன் வாங்கியவர், கடனை திருப்பி செலுத்த தவறினால் விதிக்கப்படும் அபராதம், ’அபராத கட்டணம்' என்ற பெயரில் வசூலிக்கப்படும். இது கடனுக்காக விதிக்கப்படும் வட்டி விகிதத்துடன் சேர்த்து அபராத வட்டியாக வசூலிக்கப்படாது. 

  • வங்கிகள், வட்டி விகிதத்தில் எந்த கூடுதல் கட்டுப்பாடுகளையும் அறிமுகப்படுத்தக் கூடாது. 

  • தனிநபர் கடனுங்களுக்காக விதிக்கப்படும் அபராத கட்டணங்கள், வணிக நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்படும்  கட்டணங்களை விட அதிகமாக இருக்கக் கூடாது. 

  • அபராத கட்டணங்களின் மீது கூடுதல் வட்டி கணக்கிடக் கூடாது. அதேபோல, கடன் கணக்கில் கூட்டு  வட்டிக்கான வழக்கமான நடைமுறைகளை இது பாதிக்காது. 

  • எந்த ஒரு கடன் திட்டத்திற்கும் வாடிக்கையாளர்களிடம் பாகுபாடு காட்டாமல் அபராத கட்டணத்தை நியாயமானதாக பெற வேண்டும்.

  • சம்பந்தப்பட்ட வங்கிகள் கடன் ஒப்பந்தம் மற்றும் அபராதம் குறித்த காரணத்தை வாடிக்கையாளர்களிடம் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். 

  • வங்கிகள் அதன் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடன்களுக்கான கொள்கைகளை உருவாக்கி கொள்ளலாம்.

  • கடனை திருப்பி செலுத்தாதற்கான நினைவூட்டல்களை அனுப்பும்போது, அபராதக் கட்டண தொகை குறித்த விவரங்களையும் அனுப்ப வேண்டும். 

  • அபராதம் விதிக்கப்பட்டதற்கான காரணம், அது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு  தெரிவிக்க வேண்டும்.

  • கடனை, பகுதி அல்லது முழுமையாக முன்கூட்டியே செலுத்துவதற்கான வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும்.

  • எனவே, அறு மாதத்திற்குள் அனைத்து வங்கிகளும்  புதிய அபராத கட்டண முறைக்கு மாற வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது.


இருப்பினும், கிரெடிட் கார்டு, வர்த்தக கடன்கள் போன்றவற்றுக்கு, இந்த நடைமுறை பொருந்தாது எனவும் அறிவித்துள்ளது.  இதனை தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து வங்கிகள் அபராத வட்டி விதிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.