செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி திவ்யா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) திவ்யாவிற்கு தற்போது 50 வயது ஆகிறது. இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் கூலி வேலைக்குச் சென்று தங்களுடைய குழந்தைகளை காப்பாற்றி வருகின்றனர். 



 

இவர்கள் குடிசையில் வசித்து வருகிறார்கள். நேற்று இரவு கணவன்- மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் தூங்கினார்கள். இவர்களது வீட்டின் அருகில் சிறிய மலைபோன்ற குன்று பகுதி உள்ளது. இன்று அதிகாலை 4 மணியளவில் அந்த குன்று பகுதியில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. இதையடுத்து ராமுவின் மூத்த மகன் எழுந்து கதவை திறந்து நாய் குரைக்கும் இடத்துக்கு சென்று பார்த்தார். அப்போது குன்று பகுதியில் திவ்யா அரைகுறை ஆடைகளுடன் கிடந்தார். அவரது அருகே 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் இருந்தான். திவ்யா மகனை பார்த்ததும் அந்த சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடினான்.



 

இதையடுத்து திவ்யாவின் மகன் கூச்சலிட்டான். இதனால் அக்கம் பக்கம் வசித்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். திவ்யாவை  பார்த்தபோது அவருக்கு சுய நினைவு இல்லை. அவர் இறந்த நிலையில் காணப்பட்டார். இதனால் பதற்றமடைந்த அவருடைய கணவர் மற்றும் அருகில் இருந்த உறவினர்கள் உடனடியாக, இதுகுறித்து திருக்கழுக்குன்றம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். மேலும் கிராம மக்கள் தப்பி ஓடிய சிறுவனை பிடிப்பதற்காக பல்வேறு இடங்களில் தேடியும் வந்தனர்.

 



 

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திருக்கழுக்குன்றம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டார். மேலும், தப்பியோடிய நபர் யார் என்று விசாரித்து வந்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் என்பதும், மானாமதியில் உள்ள காயலான் கடையில் வேலை செய்யும் இச்சிறுவன், திவ்யா இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, அவரை பாலியல் வன்கொடுமை  செய்ததும், தடுத்த திவ்யாவை சிறுவன் தாக்கியதால் அவர் இறந்ததும் தெரியவந்தது.



 

இதையடுத்து, தலைமறைவான 15 வயதுடைய சிறுவனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறார் சீர்த்திருத்த பள்ளியில் அடைத்தனர். ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்ணை 15 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை  செய்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.