ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை காண மகன் நாரா லோகேஷ் செல்ல முயன்ற நிலையில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


சந்திரப்பாபு நாயுடு மீது ஊழல் வழக்கு 


ஆந்திராவில் முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு சிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை 2 முறை ஆந்திராவில் முதலமைச்சராக பதவி வகித்துள்ள அவர் மீது, அவருடைய ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. முதலமைச்சராக இருந்தபோது ஐடி நிறுவனங்கள் புதிதாக அமைக்க ரூ.118 கோடி சட்டவிரோதமாக பெற்றதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு 2021 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. 


இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக ஆந்திராவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடைகள் அடைக்கப்பட்டு, பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  நந்தியாலா பகுதியில் நேற்று நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற சந்திரபாபுநாயுடு அங்கு தனது வாகனத்தில் இரவு ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார்.


கைது செய்த போலீசார் - தொண்டர்கள் எதிர்ப்பு 


அப்போது இன்று (செப்டம்பர் 9) அதிகாலை 3 மணியளவில் நந்தியாலா போலீஸ் டிஐஜி தலைமையில் அதிக அளவிலான போலீசார் சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய சென்றனர். ஆனால் எஸ்.பி.ஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் அவர் இருப்பதால் காலை 6 மணி வரை கைது செய்ய அனுமதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுமார் 3 மணி நேர காத்திருத்தலுக்குப் பின் சந்திரபாபு நாயுடுவை போலீசார் கைது செய்தனர். அவரது கைதுக்கு தெலுங்கு தேசம் தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்கு சென்ற சந்திரபாபு நாயுடுவை பின்னர் போலீசார் விஜயவாடா அழைத்து சென்றனர்.


இதனிடையே ஆந்திரா மாநிலத்தில் கடந்த 6 மாதமாக பாதயாத்திரை மேற்கொண்டு வரும் சந்திரபாபு நாயுடுவின் மகனான நாரா லோகேஷ் தனது தந்தை கைது செய்யப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்டு உடனடியாக கோதாவரி மாவட்டத்தில் இருந்து விஜயவாடா செல்ல முடிவு செய்தார். ஆனால் அவரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து லோகேஷூம், தெலுங்கு தேசம் தொண்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 




மேலும் படிக்க: ChandraBabu Naidu: முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிரடி கைது.. பெரும் பதற்றத்தில் ஆந்திரா..!