மும்பை தாராவியில் சிசிடிவி காட்சியில் கிடைத்த சிறிய க்ளூ மூலம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


இளம்பெண் ஒருவர் தன் திருமணத்திற்குப் பிறகு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தாராவிக்கு இடம்பெயர்ந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மே 11ம் தேதியன்று வீட்டில் தூங்கிக்கொண்டிருந்துள்ளார். விடியற்காலையில், அப்பெண்ணின் மாமனார் நடைபயிற்சிக்காக வீட்டிலிருந்து சென்றுவிட்ட நிலையில் அந்த இளம்பெண் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது, திறந்து கிடந்த வீட்டிற்குள் நுழைந்த இரண்டு இளைஞர்கள் அப்பெண்ணை கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு, தாங்கள் பாலியல் வன்கொடுமை செய்ததை வீடியோவும் எடுத்துள்ளனர். அப்பெண்ணின் மாமனார் வீடு திரும்பிய சமயத்தில் இருவரும் வீட்டிலிருந்து வெளியே ஓடியுள்ளனர்.


இச்சம்பவம் குறித்து காவல்துறையில் இளம்பெண் புகாரளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த துணை கமிஷனர் ப்ரணாய் அஷோக், குற்றவாளிகளைப் பிடிக்க, காவல்துறை ஆய்வாளர் பல்வந்த் பாட்டில் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இந்த தனிப்படையினர் சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள 102 சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். ஆனால் சரியான க்ளூ எதுவும் கிடைக்கவில்லை. அப்போது, அந்த தனிப்படையில் இருந்த காவலர் ஒருவர் சிசிடிவி காட்சிகளில் இருந்து ஒரு சிறிய க்ளூவை சுட்டிக்காட்டியுள்ளார். அந்த காட்சியில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கடைக்காரர் ஒருவரிடம் கையை அசைத்துவிட்டுச் செல்கிறார்.


அந்த கடைக்காரரிடம் காவல்துறையினர் விசாரித்த போது, அந்த நபரின் பெயர் அனில் சவுகான் என்றும் ப்ரிண்ட்டருக்குத் தேவைப்படும் கலர் டோனரை தனது கடைக்கு சப்ளை செய்து வருபவர் என்றும் தகவல் அளித்துள்ளார். அனில் சவுகானை மடக்கிய காவல்துறையினர் அவரிடம் விசாரணை செய்துள்ளனர். ஆரம்பத்தில் அவர் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் அனில் சவுகானின் மொபைல் லொகேஷன் மற்றும் பதிவான தொலைபேசி அழைப்புகள் ஆகியவற்றை ஆய்வு செய்ததன் அடிப்படையில் அவர் அப்பகுதியில் தான் இருந்தார் என்பதை உறுதி செய்தனர்.


பின்னர் காவல்துறையினரின் முறைப்படியான விசாரணையில் அந்த இளம்பெண்ணை தனது சகோதரர் நிலேசுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததை அனில் ஒப்புக்கொண்டார். 


அந்த பகுதியில் அந்த பெண் வசிப்பது குறித்து எப்படித் தெரியும் என்பது குறித்து அவரிடம் விசாரணை செய்துள்ளனர். அப்போது, கடந்த சில ஆண்டுகள் முன்புவரை தாராவியில் குடும்பத்தினருடன் வசித்துவந்ததாகவும், சமீபத்தில் தான் விலி பார்லே பகுதிக்கு இடம்பெயர்ந்ததாகவும் அனில் சவுகான் கூறியுள்ளார். ஆனாலும், ப்ரிண்ட்டர் டோனர்கள் விநியோகத்திற்காக அடிக்கடி தாராவிக்கு அனில் சவுகான் வந்து சென்றுள்ளார். அப்படி தாராவிக்கு வந்து சென்றபோது அந்த இளம்பெண் மீது அனிலுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அவரை பாலியல் வன்கொடுமை செய்ய தனது சகோதரருடன் சேர்ந்து அனில் திட்டம் தீட்டி இச்சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார்.




இருவரும் இந்த இடத்திற்கு மட்டும் பழக்கமானவர்கள் இல்லை. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கும் பழக்கமானவர்கள் என்ற அதிர்ச்சி தகவலும் காவல்துறையினருக்குக் கிடைத்திருக்கிறது. அப்பெண்ணின் மாமியார் வெளியூருக்குச் சென்றிருப்பதையும், கணவரும், மாமனாரும் வெளியே சென்றுவிட்டால் அப்பெண் தனியாக இருப்பார் என்பதையும் இருவரும் தெரிந்து வைத்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே இருவரும் சேர்ந்து அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அப்பெண்ணை மிரட்டி அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்யலாம் என்ற நோக்கத்தில் வீடியோ எடுத்ததும் தெரிய வந்துள்ளது.


19 வயதான அனில் சவுகான் மற்றும் 20வயதான நிலேஷ் சவுகான் ஆகிய இருவர் மீதும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை, மிரட்டுதல், தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.