சென்னையில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்று ஐ.ஐ.டி. இந்தியாவின் உயரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை ஐ.ஐ.டி.யில் வேதியியல் ஆராய்ச்சி மாணவி ஒருவர் படித்து வந்துள்ளார். அந்த மாணவி அந்த துறையின் உதவி பேராசிரியர்  மற்றும் உடன் பயிலும் மாணவர்களால் தொடர்ந்து பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு வந்துள்ளார்.


இதனால், கடுமையாக மன உளைச்சலுக்கு ஆளான மாணவியின் பரிதாப நிலை குறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், புகார் அளித்து 9 மாத காலமாகியும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றவாளிகள் மீது இன்று வரை எந்தவித கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.


மேலும், மாணவியை சாதி ரீதியாகவும் அவர்கள் இழிவுபுடுத்தியதாக அளித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கு பிரிவு 376  மற்றும் எஸ்.சி.. / எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.


இந்த விவகாரம் தொடர்பாக மகளிர் ஆணையம் உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைக்க வேண்டும்  என்று அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். சென்னை ஐ.ஐ.டி.யில் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து பாலியல் அத்துமீறல்கள் அரங்கேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.