திருட்டு, வழிப்பறி, மற்றும் சைபர் குற்றங்கள் போன்ற குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

 

ஆன்லைன் மூலம் மோசடி

 

மதுரையில் கடந்த 28.06.2024ம் தேதி மதுரை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை Part Time Job வேலை தருவதாக கூறி ஏமாற்றி ரூ.1,32,06,88 ஆன்லைன் பணமோசடி செய்த நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கொடுத்த புகாரின் பேரில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் உடனடியாக வழக்கு பதிவு செய்து மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கையால் குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் வங்கி கணக்குகளிலிருந்து ரூபாய்.2,18,50,150 முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக குற்றவாளியை கண்டுபிடிக்க மதுரை போலீஸ் எஸ்.பி., உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

 

புதுச்சேரியில் கைது

 

Part Time Job வேலைக்காக பணம் அனுப்பிய வங்கி கணக்குகளை பின்தொடர்ந்து புலன் விசாரணை செய்த போது, Indusind வங்கி கணக்கை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் ஆன்லைன் பணமோசடி செய்வதற்கு உடந்தையாக இருந்த நபர்கள் பாண்டிச்சேரி நடேசன் தெருவைச் சேர்ந்த கண்ணன் மகன் வடிவேலு, ஏழுமலை மகன் ஜெயராமன் மற்றும் விழுப்புரம் மாவட்டம் தொளாமூரைச் சேர்ந்த கண்ணன் மகன் ராமலிங்கம் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் போலியாக நடப்பு வங்கி கணக்கு ஒன்றினை ராமலிங்கம் மூலமாக தொடங்கி சைபர் கிரைம் குற்றவாளிகள் பொதுமக்களிடம் ஆன்லைன் பணமோசடி செய்வதற்கு உடந்தையாக இருந்ததும், இந்த வங்கி கணக்கு மூலம் ஒரு கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனைக்கு ரூபாய் ஒரு லட்சம் கமிஷன் பெற்றதும் தெரிய வந்தது. குற்றவாளிகளை  காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் பாண்டிச்சேரி சென்று கைது செய்து அவர்களிடமிருந்து குற்ற செயலுக்கு பயன்படுத்திய லேப்டாப், செல்போன்கள், சிம்கார்டுகள், வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் ATM கார்டுகள் ஆகியவற்றை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

 

உடனே புகார் அளிக்க உத்தரவு

 

மேலும், இந்த குற்றவாளிகள் ஆந்திரா, ஜம்மு காஷ்மீர், கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், திரிபுரா, தெலங்கானா, சண்டிகர், குஜராத், கர்நாடகா, உத்திரபிரதேசம் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் பொதுமக்களை ஆசைவார்த்தை கூறி சைபர் குற்றவாளிகளின் மூலம் ஆன்லைன் பணமோசடி செய்து ரூ.1.5 கோடி வரை பணம் பெற்று ஏமாற்றி கைவரிசை காட்டியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் குற்றச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் யாரென்று கண்டறிந்து கைது செய்த தனிப்படையினரை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டியதோடு மற்ற குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்ய அறிவுறுத்தினார்கள். சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் பொதுமக்கள் தாமதம் செய்யாமல் 1930 என்ற கட்டணமில்லா தொலைப்பேசியை தொடர்பு கொண்டும் அல்லது இதர சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாக புகார் கொடுக்கவும் மதுரை புறநகர் மாவட்ட மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.