திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் பள்ளிவாசல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பக்ருதீன் அலி அகமது மகன் முகம்மது பெமினாஸ் 23 வயது.  இவர் அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மகள் கௌசல்யாவை காதலித்து வந்துள்ளார். இதற்கு கௌசல்யாவின் பெற்றோர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்துள்ளனர். தனது மகளை காதலிக்க கூடாது என முகம்மது பெமினாஸிடம் தொடர்ந்து கூறி வந்துள்ளனர்.  அதனையும் மீறி முகம்மது பெமினாஸ் கௌசல்யாவிடம் பழகி வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் இன்று கௌசல்யாவின் தந்தை விஜயகுமார் மற்றும் தாய் தீபா இருவரும் இருசக்கர வாகனத்தில் முகம்மது பெமினாஸ் வீட்டிற்கு நேரடியாக சென்றுள்ளனர். அங்கு முகம்மது பெமினாஸ் மற்றும் அவரது பெற்றோர்களிடம் எங்களுடைய பெண்ணிடம் உங்கள் மகன் பழக வேண்டாம், நாங்கள் எங்கள் பெண்ணிற்கு வேறு ஒரு நபரை திருமணம் செய்ய உள்ளோம் என கூறியுள்ளனர். அதனை ஏற்காமல் கௌசல்யாவை தான் திருமணம் செய்வேன் என முகம்மது பெமினாஸ் கூறியுள்ளார்..



இன்னிலையில் கோபமடைந்த கௌசல்யாவின் பெற்றோர்கள் கையில் வைத்திருந்த அரிவாளை எடுத்து முகம்மது பெமினாஸின் தலை மற்றும் கை ஆகிய இடங்களில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். உடனடியாக ரத்த வெள்ளத்தில் கிடந்த முகம்மது பெமினாஸை உறவினர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் முகம்மது பெமினாஸின் உறவினர்கள் அடியக்கமங்கலத்தில் கௌசல்யாவின் தந்தை விஜயகுமார் வைத்துள்ள மருந்தகத்தை கற்கள் மற்றும் கட்டையால் அடித்து உடைத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த திருவாரூர் தாலுகா காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் 



மேலும் கௌசல்யாவின் தந்தை விஜயகுமாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் அடியக்கமங்கலம் பகுதியில் இருதரப்பினரிடையே மோதல் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருப்பதற்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவின் அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திருவாரூர் தாலுகா காவல் துறையினர் கௌசல்யாவின் தாயார் தீபாவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடனடியாக கௌசல்யாவின் பெற்றோரை காவல்துறையினர் கைது செய்யவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என முகம்மது பெமினாஸ் உறவினர்கள் தெரிவித்துள்ளனர் மேலும் திருவாரூர் தாலுகா காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முகம்மது பெமினாஸிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். தனது மகளை காதலித்த நபரை பெற்றோர்களை வீடு தேடி சென்று வெட்டிய சம்பவம் அடியக்கமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.