’குட்கா - பான்மசாலா டோர் டெலிவரி, குறைந்த லிட்டர் சாராய ஊறல், செலவே இல்லாத போதை மாத்திரை, கடத்தல் சாராயம், குக்கர் சாராயம்’ என்று போதையின் பல்வேறு பரிமாணங்கள் ஊரடங்கு காலத்தில் அதிகம் உலா வர ஆரம்பித்துவிட்டன. கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்தது. தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு குறைந்ததால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மீண்டும்  அறிவித்துள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பொதுமக்கள் வெளியே செல்லவேண்டும் என குறிப்பிட்ட சிலவற்றிற்கு  தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.



இதனால் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கு அறிவித்த சமயத்தில் பலரும் மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்துவந்தனர். தொடர்ந்து ஊரடங்கு நீடிப்பதால் பதுக்கல்காரர்களிடமே தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. இதனால் போதை மயக்கத்தில் பலரும் விநோதமான போதை பழக்கத்திற்கு அடிமையாவதும், கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் என தங்களுக்கு தெரிந்த வழிமுறைகளை நோக்கி செல்கின்றனர்.  இதே நிலை தமிழ்நாடு முழுதும் எட்டிவருகிறது. ஆங்காங்கே யூடியூப் சாராய சமையல் கலைஞர்கள் எக்குத்தப்பாக மாட்டி வருகின்றனர். இது போன்ற விஷயங்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்று மண்டைக்கு உறைத்தாலும் அதைப்பற்றி சிறிதும் கவலைகொள்ளாமல் போதை வலையில் விழுகின்றனர். இது சமுதாயத்தில் மிகப்பெரும் பிரச்சனையாக மாறிவருகிறது.




தென்மாவட்டங்களில் மதுரை, தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் என எல்லா இடங்களிலும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது. ஊரடங்கு சமயத்தில் மது கிடைக்கவில்லை என வெளிமாநிலங்களில் இருந்து மதுபாட்டில்கள் இரயில் மூலம் கொண்டுவரப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் மதுரை வழியாக மைசூரிலிருந்து  தூத்துக்குடிக்கு செல்லும் இரயிலில்  பாதுகாப்பு படை போலீஸ் சோதனை செய்தனர். அப்போது, 2 நபர்கள் மதுபான பாட்டில்கள் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.


 



அவர்களிடம் இருந்து ரூ.10,800 மதிப்புள்ள 72 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அவர்களை கைது செய்த இரயில்வே பாதுகாப்பு படை போலீசார், இது குறித்து மதுரை மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதே போல் மதுரையில் மாத்திரை புழக்கமும் அதிகரித்துள்ளது. வலி நிவாரணி, தூக்க மாத்திரிகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டு ஒருநிலையில்லா போதை அடைவதால் அதனையும் பயன்படுத்த துவங்கியுள்ளர்.  மதுரையில் 810 மாத்திரிகைகள் பறிமுதல் செய்யப்பட்டு மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே போல் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர் மோட்டார் சைக்கிளில் ஸ்நாக்ஸ் சேல்ஸ் செய்வதுபோல காவல் துறையினரை கண்துடைப்பு செய்து குட்கா, பான்மசாலா போன்ற போதை பொருட்களை மறைத்து, கிராமங்களில் விற்பனைசெய்தது தெரியவந்தது.


இதைத்தொடர்ந்து தேவகோட்டை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் பிரவீன்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது குட்கா போன்ற போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது.  தொடர்ந்து பிரவீன் உடனடியாக கைது செய்யப்பட்டார். அதே சிவகங்கை மாவட்டத்தில் திருவேகம்பத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட திராணி கிராமத்தில் சாராயம்  காய்ச்சுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து சோதனை செய்தபோது  சமயல் கொட்டகையில் சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்தது அம்பலமானது.



இதனால் சாராயம் காய்ச்சிய முத்துக்கண்ணன், துரை, செல்வம்  ஆகியோர் மூவரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து மூன்றரை லிட்டர் சாராயம், இருசக்கர வாகனம், சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பாத்திரம் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர். அதேபோல் வெள்ளுர் கிராமத்தில் முனியாண்டி என்பவர் வீட்டின் உள்ளே 40 லிட்டர் சாராய ஊறல் போட்டுள்ளது தெரியவந்ததை அடுத்து வழக்குப் பதிவு செய்து 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வாறு தொடர்ந்து பல்வேறு இடங்களில் சாராயம் காய்ச்சுவதும், போதை பொருள் தயாரிப்பதும். அதிகரித்து வருகிறது சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதை மிஸ் பண்ணாதீங்க பாஸ்- ,''பரீட்சை அட்டையில கூட தாளம் தான் போடுவேன்'' - பறை இசைக்கலைஞர் வேலு ஆசான் கலகல