நாகை அருகே திடீர்குப்பம் ஆற்று பகுதில் உள்ள தோட்டத்தில் ஒரு டன் கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேர கைது செய்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

 


கடந்த 2001-ம் ஆண்டுக்கு முன்பு வரை, இந்தியாவிலும் கடல்அட்டைகளைப் பிடிக்க அனுமதி இருந்தது. ஆனால், அதன் பின்னர் கடந்த 16 வருடங்களாக அவற்றைப் பிடிக்க தடை இருந்து வருகிறது. இது மட்டுமல்ல, இதன் வரிசையில் மொத்தம் 53 கடல் வாழ் உயிரினங்கள் பிடிப்பதற்குத் தடை இருக்கிறது. ஆனால், அவற்றுக்கு சீனா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அமோக வரவேற்பு உண்டு. இதை அந்நாட்டு மக்கள் உணவுக்காகவும், மருந்துக்காகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர். இவற்றில் பல ரகங்கள் உண்டு அதற்கேற்ப. ஒவ்வொரு ரகத்துக்கும் ஒவ்வொரு விலை போகிறது. இதில் ராஜ கடல் அட்டையானது அதிகமான விலைக்குப் போகும் . தடை அமலில் இல்லாதபோது மீனவர்கள் அதிகமாக அவற்றை வணிகம் செய்து வந்தனர். இப்போது நீடிக்கும் தடையால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

கடல் அட்டைகளை அதிகமாகப் பிடிக்கப்பட்டால் அந்த இனம் அழிந்துவிடும் என்பது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தரப்பு வாதமாக முன் வைக்கப்படுகிறது. ஆனால், அவை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சுமார் 10 லட்சம் குஞ்சுகளை பொறிக்கும் என மீனவர்கள் தரப்பிலும் சொல்லப்படுகிறது. இந்தத் தடையை நீக்குவதற்காக மீனவர்கள் சார்பாக கடந்த 16 வருடங்களில் பல போராட்டங்கள் நடைபெற்று இருக்கின்றன. ஆனால், மத்திய அரசுதான் அசைந்து இதற்கு செவி சாய்க்கவில்லை. 



கடல் அட்டைகளுக்கு எனத் பிரத்யேக வலை இல்லாத நிலையில் மீன் பிடிக்கும் வலையில் கடல் அட்டைகள் மாட்டிக் கொண்டு கரைக்குக் கொண்டு வருவது தெரிய வந்தால் மீனவனுக்கு 7 ஆண்டு சிறைவாசமும் ரூபாய் 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். மீன்களைப் பிடிக்கும்போது, எதிர்பாராமல் வலையில் மாட்டிக் கொள்ளும் அவற்றால் சிறைவாசம் அனுபவித்த மீனவர்களும் உள்ளனர். ஆனால், தடை செய்யப்பட்ட ஒன்றைத் திட்டமிட்டு விற்பனை செய்ய ஒரு கூட்டம் எல்லாப் பகுதிகளிலும் நெட்வொர்க்காக செயல்படுகிறது. அதேபோலத்தான் தமிழ்நாட்டிலும் இதற்கு ஒரு நெட்வொர்க் இருக்கிறது.

 

இந்த நிலையில் தமிழகத்தில் கடல்வாழ் உயிரினங்களில் அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கடல் அட்டை உள்ளிட்ட அரிய வகை உயிரினங்களை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே கடல் அட்டைகள் கடத்தப்படுவதை தடுக்க நாகப்பட்டினம் மாவட்டத்தில் வனத்துறையினர் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை அருகே திடீர்குப்பம் கடுவையாற்றின் ஓரம் சபரிநாதன் என்பவருக்கு சொந்தமான குடோனில் வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகள் பதப்படுத்துவதாக தகவல் வந்தது.



 

இதையடுத்து கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த குடோனில் வெளிநாடுகளுக்கு கடத்த பதப்படுத்தி வைத்திருந்த ஆயிரம் கிலோ எடையுள்ள ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் இருப்பது தெரியவந்தது. இது குறித்து கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து குடோனில் இருந்த ஆயிரம் கிலோ எடை கொண்ட கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் நாகப்பட்டினம் அப்பாவு செட்டித்தெருவைச் சேர்ந்த சபரிநாதன்(40), அங்கு பணியாற்றிய நாகப்பட்டினம் செல்லலூர் சுனாமிகுடியிருப்பை சேர்ந்த சுரேஷ்(47), நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை டாடா நகரைச் சேர்ந்த செல்வம்(50) ஆகிய 3 பேரை கைது செய்தனர். கைப்பற்றிய பொருட்களை பறிமுதல் செய்து நாகப்பட்டினம் வனசரக அலுவலர்களிடம் கடலோர காவல் குழும போலீசார் ஒப்படைத்தனர்.