முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இரவில் ஆயுதங்களுடன் எஸ்டேட்டுக்குள்  அத்துமீறி நுழைந்த கும்பல், பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றது. இது தொடர்பாக சயன், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ்  உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.


இதனிடையே கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய நீலகிரி காவல் துறையினர், இவ்வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக கூறிய சயன் மற்றும் விபத்தில் உயிரிழந்த கனகராஜின் அண்ணன் தனபால் ஆகியோரிடம் விசாரணை செய்தனர். பின்னர் ஏடிஎஸ்பி தலைமையில் 5 தனிப் படைகள் அமைத்து கூடுதல் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.




நான்காவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஜம்சிர் அலி கோடநாடு பங்களா மேலாளர் நடராஜன், கோத்தகிரி மின்வாரிய பொறியாளர், விபத்தில் உயிரிழந்த கனகராஜின் மனைவி கலைவாணி மற்றும் அவரது உறவினர் தினேஷ், குற்றவாளிகளை கேரளாவிற்கு தப்பிக்க உதவியதாக கூறப்படும் கூடலூர் பகுதியை சார்ந்த அனீஸ் மற்றும் சாஜி, சம்பவத்தன்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திய வாகனங்களை வழங்கிய வாகன உரிமையாளர் நவ்ஷத், இடைத்தரகர் நப்பல் உள்ளிட்டோரிடம் நீலகிரி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கோடநாடு எஸ்டேட்டிலும் தனிப்படை காவல் துறையினர் ஆய்வு நடத்தினர்.




இந்நிலையில் கோடநாடு வழக்கில் எட்டாவது மற்றும் ஒன்பதாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சந்தோஷ்சாமி, மனோஜ்சாமி ஆகியோரை விசாரணைக்கு ஆஜாராகுமாறு நீலகிரி காவல் துறையினர் நேற்று சம்மன் அனுப்பினர். கேரளாவை சேர்ந்த இருவரும் ஜாமீனில் உள்ளனர். இதேபோல இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தீபு, ஜித்தின் ஜாய் ஆகியோரை வருகின்ற 24 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜாராகுமாறு சம்மன் அனுப்பினர். உதகையில் உள்ள பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சந்தோஷ்சாமி, மனோஜ்சாமி ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகினர். இருவரிடமும் ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாகவும், இவ்வழக்கில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.


இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி, ஜித்தின் ஜாய் ஆகியோர் தரப்பு வழக்கறிஞர், கோடநாடு வழக்கு விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவர உள்ளது எனவும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் பல்வேறு உண்மைகளை சொல்ல தயாராக உள்ளனர் எனத் தெரிவித்து இருந்தார். மேலும் இவ்வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவரும் எனவும், அவர்களது உயிர் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளது எனவும் அவர் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.