நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள கீழகோடன்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் குப்புராஜ். இவரது மனைவி கனகமணி. இவர்களுக்கு 2 மகன்களும், கிறிஸ்டில்லாமேரி (வயது 19) என்ற மகளும் உள்ளனர். இவர்களின் தந்தை குப்புராஜ் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் தாய் கனகமணி மூவரையும் வளர்த்து வந்தார். இந்த சூழலில் மகள் கிறிஸ்டில்லா மேரிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் வருகிற 1-ந்தேதி திருமணம் நடக்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் தீவிரமாக செய்து வந்தனர். இந்த நிலையில்  கிறிஸ்டில்லா மேரி அடிக்கடி செல்போன் பயன்படுத்தி வந்ததாக கூறப்படும் நிலையில் அதிக நேரத்தை அதிலேயே செலவழிப்பதாக தாய் கண்டித்து உள்ளார். மேலும் செல்போனை வைத்து கொண்டு வீட்டு வேலைகள் எதுவும் செய்யாமல் இருப்பதாகவும் தாய் கூறி உள்ளார். 


திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் திருமணம் முடிந்து சென்றால் அங்கு வேலைகளை பார்க்க வேண்டும். அதற்குள் சமையல் வேலைகளை கற்றுக் கொள் என  தாய் கண்டித்ததாக கூறப்படுகிறது. தாய் கண்டித்ததால் மனமுடைந்த கிறிஸ்டில்லா மேரி  வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வயலுக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டதாக தெரிகிறது, இதில் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். வீட்டில் உள்ளவர்கள் வந்து பார்த்தபோது விஷமருந்தி மயக்கமடைந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக முனைஞ்சிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிறிஸ்டில்லாமேரி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்,  திருமணம் நிச்சயிக்கப்பட்ட  நிலையில் தாயின் கண்டிப்பை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060