கர்நாடகாவில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியில் தேசிய கபடி வீரர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கர்நாடக மாநில சிக்கமகளூரு தாலுகாவில் தேகுரு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வினோத் ராஜ் அரஸ் என்ற 24 வயது இளைஞர் வாழ்ந்து வந்தார். இவர் தேசிய அளவிலான கபடி போட்டிகளில் விளையாடி உள்ளார். இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்த தனுஜா என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. 2 பேரும் செல்போன் வழியாகவே தங்கள் காதலை வெளிப்படுத்தி வந்துள்ளனர். 


இதனை அறிந்த தனுஜாவின் பெற்றோர் இவர்களின் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த வினோத் ராஜ் - தனுஜா ஜோடி ஒரு கட்டத்தில் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி பெற்றோருக்கு தெரியாமல் கடந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி அப்பகுதியில் உள்ள கோயிலில் திருமணமும் செய்து கொண்டனர். இதன்பின்னர் வினோத் ராஜ் மற்றும் தனுஜா ஆகிய இருவரும் அப்பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். 


இப்படியான நிலையில் தனுஜாவின் பெற்றோர் தனது மகளின் திருமணத்துக்கு எதிராக சிக்கமகளூரு புறநகர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வினோத், தனுஜா இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தான் அந்த ட்விஸ்ட்டான சம்பவம் நடைபெற்றுள்ளது. பெற்றோரை பார்த்ததும் தனுஜா பாசத்தில் கட்டித்தழுவி கண் கலங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர்களுடனே தனுஜா சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த வினோத் ராஜ் கடந்த சில நாட்களாக மனவேதனையில் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். கபடி விளையாடுவதிலும் கவனம் செலுத்தவில்லை என சொல்லப்படுகிறது. 


இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வினோத் ராஜ் மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சிக்கமகளூரு புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வினோத் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 




மேலும் படிக்க: மது அருந்த பணம் தர மறுத்த தாயை கட்டையால் அடித்து கொன்ற மகன் - மதுரையில் அதிர்ச்சி