திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள செல்வா நகரை சேர்ந்தவர் கோவிந்த ராஜ் வயது (60),  இவர் விவசாயம் செய்துவருகிறார் . இவரது மனைவி கலாவதி வயது (59), இவர் சமத்துவ மக்கள் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். இவர்களது ஒரே மகள் திருமணம் முடிந்து விட்டு நீண்ட காலமாக வெளி நாட்டில் வசித்து வருகிறார். இவர்களது சொந்த கிராமமான தண்டராம்பட்டு அருகே உள்ள போந்தைக்கு கடந்த 9 ஆம் தேதி குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். சொந்த பணி காரணமாக கிராமத்திலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை திருவண்ணாமலை செல்வாநகரில் உள்ள இவர்களது வீட்டின் பக்கத்து வீட்டிற்கு அதிகாலை பால்காரர் வந்துள்ளார்.



அப்போது, கலாவதி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, உடனடியாக பக்கத்து வீட்டுகாரர்கள் இதுகுறித்து கலாவதிக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், திருவண்ணாமலை கிழக்கு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறை மற்றும் கலாவதி, வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். மேலும் தகவல் அறிந்த காவல்துறையினர் வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில்  28 சவரன் நகைகள், 250 கிராம் வெள்ளி திருடுப்போனது தெரியவந்தது.  இதையடுத்து, கைரேகைநிபுணர்களை வரவழைக்கப்பட்டு கொள்ளையடித்த நபர்களின் கைரேகை தடயங்களை சேகரிக்கப்பட்டது.



இதே போன்று இந்த திருட்டு நடந்த வீட்டிற்கு அருகே உள்ள சுப்பிரமணி என்பவரின் வீட்டில் மர்ம ஆசாமிகள் பூட்டை உடைத்து, 2 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 1 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் சுப்பிரமணி அவருடைய உறவினர்கள் வீட்டிற்கு சென்னைக்கு சென்றுள்ளனர். இதனை அறிந்த மர்ம கும்பல் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இந்த தொடர் திருட்டு சம்பவங்கள் குறித்து திரு வண்ணாமலை கிழக்கு காவல்துறையினர் தனித்தனியாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


திருவண்ணாமலை நகராட்சி பகுதிகளில் தொடர்ந்து இரண்டு நாட்களாக திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தனியார் நிதி நிறுவனத்தின் இரும்பு கதவினை வெல்டிங் வைத்து திறந்து திருட முயன்றுள்ளனர். இதனால் பொதுமக்களின் கோரிக்கை காவல்துறையினர் முக்கிய சாலைகளில் மட்டும் ரோந்து பணியில் ஈடுபடாமல் குடியிருப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்படவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.