சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக பெங்களூரு, சென்னை, ஐதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து அதிக அளவில் மக்கள் வருகின்றனர். புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் தங்களது பொழுதை கழிக்க பல்வேறு இடங்கள் உள்ளன. கடற்கரை சாலை, பாரதி பூங்கா, நோணாங்குப்பம், படகு குழாம், அரவிந்தர் ஆசிரமம் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா தலங்கள் இருக்கின்றன.




புதுச்சேரியின் மதுபானத்துக்கு மது பிரியர்கள் மத்தியில் மவுசு அதிகம். இதற்காக தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிபவர்கள், தொழிலதிபர்கள் வார இறுதி நாட்களில் புதுவை வந்து ஓய்வெடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளை குறி வைத்து பாலியல் தொழில் கொடி கட்டி பறக்கிறது. சொகுசு தங்கும் விடுதிகள், அழகு நிலையங்கள் விபசாரத்துக்காக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அழகிகளை ஏற்பாடு செய்து கொடுக்கின்றன. இதற்காக பெரும் தொகையை வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூல் செய்கின்றனர்.




அழகு நிலையங்களில் விபசாரத்துக்கு அழைப்பதற்கு என்று பெண்களை வைத்துள்ளனர். செல் போன் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு தங்களது பேச்சில் மயக்க வைத்து அழகு நிலையங்களுக்கு வர வைத்து விபசாரத்தில் ஈடுபட வைக்கின்றனர். குறிப்பிட்ட நேரத்துக்கு தொகை நிர்ணயம் செய்து வசூல் செய்கின்றனர். இதில் வருமானம் குவிவதால் பெரிய அளவிலான கூட்டம் இந்த தொழிலில் களம் இறங்கியுள்ளது. இந்த தொழிலுக்கு புதுச்சேரி போலீசாரின் ஆசி முழுவதுமாக உள்ளதாக கூறப்படுகிறது.



பெயரளவுக்கு அவ்வப்போது ஒரு சில இடங்களில் சோதனை நடத்தி கணக்கு காட்டுவதோடு அவர்களது வேலை முடிந்து விடுகிறது. விபசாரம், போதை பொருள் விற்பனையாளர்களுடன் கூட்டு சேர்ந்து கொள்ளும் சில போலீசார் அவர்களிடம் இருந்து பெருந்தொகையை மாமூலாக வசூலித்து கொள்கின்றனர். இந்த விசுவாசமான போலீசார், உயர் அதிகாரிகள் சோதனைக்கு செல்வதை முன்கூட்டி சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவித்து. உஷார்படுத்தி விடுகின்றனர்.




எனவே பெரும்பாலான இடங்களில் சோதனைக்கு செல்லும் உயர் அதிகாரிகள் வெறும் கையுடன் திரும்புகின்றனர். இது மட்டுமின்றி சோதனைக்கு செல்லும் போலீசார் அங்கு விபசாரத்தில் ஈடுபடும் வெளியூர் நபர்களை பிடித்து அவர்கள் வைத்திருக்கும் பணம், நகையை பறிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. 


இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி நடந்த சோதனையில் மறைமலை அடிகள் சாலை, அண்ணாநகர், காமராஜர் சாலை ஆகிய 3 இடங்களில் உள்ள மசாஜ் சென்டர்களில் விபசாரம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 9 பேரை கைது செய்ததுடன், 10 அழகிகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த நிலையில் விபசாரம் நடந்த மசாஜ் சென்டர்களின் உரிமங்களை ரத்து செய்ய வலியுறுத்தி காவல்துறை சார்பில் புதுச்சேரி நகராட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவக்குமார் உத்தரவின் பேரில் வருவாய்துறை அதிகாரி சாம்பசிவம் மற்றும் ஊழியர்கள் மறைமலைஅடிகள் சாலை, அண்ணாநகரில் உள்ள 2 மசாஜ் சென்டர்களுக்கு சீல் வைத்தனர். மேலும் அவர்களது உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.