ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த கீழத்தூவல் காவல் நிலையத்தில், கடந்த 4ஆம் தேதி இரவு போலீசார் தாக்கியதால் தான் உயிரிழந்ததாக கூறப்படும் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர் மணிகண்டன், வாகன சோதனையின்போது வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால், அவரை மடக்கி பிடித்த போலீசார் ஏன் வாகனத்தை நிறுத்தாமல் சென்றாய் என விசாரிக்கும் வீடியோ காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த வீடியோ காட்சியில் போலீசார் கேட்கும் கேள்விகளுக்கு மாணவர் மணிகண்டன் பதில் அளித்துள்ளார். அப்போது தமக்கு பின்னால் அமர்ந்து வந்த நண்பர் சஞ்சய் என்பவர் என் மீது போலீசில் வழக்கு உள்ளது. எனவே, பைக்கை நிறுத்தாமல் செல் என்று சொன்னதால்தான் நான் நிறுத்தாமல் சென்றேன் என அவர் போலீசாரிடம் தெரிவித்து இருக்கிறார். இதோ அந்த அதிர்ச்சி வீடியோ இதோ...



 


ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகேயுள்ள நீர்கோழியேந்தலைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் மகன் மணிகண்டன். கல்லூரி இறுதியாண்டு மாணவரான இவர், கடந்த  4ம் தேதி மாலை பரமக்குடி – கீழத்தூவல் சாலையில் கீழத்தூவல் காவல் நிலைய போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அந்த வழியாக பைக்கில் தன் நண்பருடன் சென்றார். அப்போது போலீஸார் கையசைத்து நிறுத்தச் சொல்லியிருக்கின்றனர். அப்போது, அவர் பைக்கை நிறுத்தாமல் வேகமாகச் சென்றதாகக் கூறப்படுகிறது.




அதையடுத்து, போலீஸார் மணிகண்டனைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். பின்னர், மணிகண்டனின் பைக், செல்போன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார், நடந்த சம்பவம் குறித்து மணிகண்டனின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். காவல் நிலையத்துக்கு வந்த மணிகண்டனின் பெற்றோர் லட்சுமணன், ராமலெட்சுமி, தம்பி அலெக்ஸ் பாண்டியன் ஆகியோர் மணிகண்டனை வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.


இதனையடுத்து, வீட்டுக்கு வந்த பிறகு மணிகண்டனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால், அவர் உறவினர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த ஆம்புலன்ஸ் மருத்துவர், பரிசோதனை செய்துவிட்டு மணிகண்டன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறியிருக்கின்றனர். இதையடுத்து, மணிகண்டனின் உறவினர்கள் அவர் போலீஸார் தாக்கியதால்தான் உயிரிழந்ததாகச் சொல்லி, முதுகுளத்தூர் – பரமக்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனைத் தொடர்ந்து, மாணவன் மணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் கடந்த இரண்டு நாட்களாக போலீசார் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.


இதனையடுத்து பெற்றோர்கள், போலீசார் தனது மகனை விசாரணைக்கு அழைத்துச்சென்று அடித்து துன்புறுத்தியதால்தான் உயிரிழந்துள்ளார்.


ஆகவே, சம்மந்தப்பட்ட போலீசார்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என  மதுரை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீண்டும் உடற்கூறு ஆய்வு செய்ய உத்தரவிட்டு இருந்தார். இந்தநிலையில் மாணவர் மணிகண்டனிடம் போலீசாரிடம்  விசாரணை செய்த வீடியோ காட்சி வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.