ஈரோட்டில் அம்மா - கணவர் இறந்த நிலையில், அழுகிய நிலையில் இருந்த அவர்களது உடலுடன் பெண் ஒருவர் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு மாவட்டம் குமணன் வீதியைச் சேர்ந்த  மோகன சுந்தரம் என்பவர் மனைவி சாந்தி, மாமியார் கனகாம்பாள், மகன் சரவணக்குமார் ஆகியோரோடு வசித்து வந்தார். இவர்களது மகள் சசிரேகா திருமணாமாகி  திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.  சரவணக்குமாருக்கு உடல்நலக்குறைவு இருப்பதால் அவரை தங்களுடன் வைத்து மோகன சுந்தரம் - சாந்தி பராமரித்து வந்தனர். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து ஓய்வு பெற்ற 74 வயதான மோகனசுந்தரத்தின் குடும்பம் போதிய வருமானம் இல்லாமல் தவித்து வந்ததாக சொல்லப்படுகிறது. 


அதுமட்டுமின்றி முதுமை காரணமாக மோகனசுந்தரம், கனகாம்பாள் ஆகியோரின் உடல் நலமும் பாதிக்கப்பட்டது. இதற்காக கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதுவும் ஒருகட்டத்தின் நின்று போக மோகனசுந்தரம், சாந்தி ஆகியோர் வறுமையால் கோவில் மற்றும் வெளி இடங்களுக்கு சென்று இலவசமாக கிடைக்கும் உணவுகளை வாங்கி சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளனர். 


ஆனால் வயது முதுமை, வறுமை, உடல்நலம் பாதிப்பு ஆகியவை காரணமாக சில தினங்களுக்கு முன் மோகனசுந்தரம், கனகாம்பாள் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.  ஆனால் கையில் பணம் இல்லாததால் இறந்த உடல்களை இறுதிச்சடங்கு செய்யாமல் சாந்தி தனது மகனுடன் வீட்டிலேயே வைத்துள்ளார். 


இந்நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து அதிகளவில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக கோபி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்கு சாந்தியின் வீட்டுக்குள் சென்று பார்த்த போது  அழுகிய நிலையில் மோகனசுந்தரம் மற்றும் கனகாம்பாளின் உடல் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.  அதன் அருகில் சாந்தியும், அவருடைய மகன் சரவணக்குமாரும் இருந்ததையும் பார்த்துள்ளனர். 


உடனடியாக இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து சாந்தியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அவர் வறுமை, உடல் நலன் பாதிப்பு, சரியான நேரத்தில் உணவு கிடைக்காதது  காரணத்தால் கடந்த ஒரு வாரம் முன்பு மோகனசுந்தரமும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனகாம்பாளும் இறந்ததாக தெரிவித்துள்ளார்.


மேலும் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய தன்னிடம் பணம் இல்லாமல் இருந்தது. அதேசமயம் இதுகுறித்து பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் யாரிடமும் கூறி உதவி கேட்க மனம் இல்லாததால்  நானும், எனது மகனும் இறந்த உடல்களுடன் இருந்தோம் என கண்கலங்கியபடி தெரிவித்துள்ளார். ' என்றதை கேட்டதும் போலீசார் கண்கலங்கினர். இந்த சம்பவம் கோபி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.