சீர்காழி நகராட்சி சார்பில் தரைக்கடை வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட இலவச வண்டிக்கு தலா ரூபாய் 2000 கையூட்டு வாங்கி கொண்டு 9 வண்டிகளை நகராட்சி நிர்வாகம் தருவதாக வியாபாரிகள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர். தெருவோர வியாபாரிகளிடையே, சுய வேலைவாய்ப்பு, சுய-வாழ்வு மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை மீட்டெடுக்கும் நோக்கில் 2020 ஜூன் 1-ஆம் தேதி பிரதமர் ஸ்வநிதி திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் மத்திய அரசின் மிக வேகமாக வளர்ந்து வரும் குறு கடன் திட்டங்களில் ஒன்றாகும்.  இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி பகுதிகளில் சாலையோரம் தரைக்கடை வைத்துள்ள சிறு வியாபாரிகளுக்கு ஒன்றிய அரசின்  திட்டமான பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் ( pm svanidhi ) கீழ் தள்ளுவண்டி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.




இதனால், தரைக் கடை வைத்துள்ள வியாபாரிகள் மழைக்காலம், வெயில் காலத்தில் விற்பனை செய்வதில் தொய்வு இல்லாமல் வியாபாரம் செய்வதற்காக சிறு வியாபாரிகளுக்கு ஒன்றிய அரசு தள்ளுவண்டிகளை இலவசமாக ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் ஏழை வியாபாரிகளுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில்  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி பகுதியில் சாலை ஓரம் தரைக்கடை வைத்துள்ள ஒன்பது வியாபாரிகளுக்கு இன்று இலவச தள்ளுவண்டியை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், நகராட்சி தலைவர் துர்கா பரமேஸ்வரி மற்றும் ஆணையர் ஆகியோர் தரைக்கடை வியாபாரிகளுக்கு தள்ளு வண்டிகளை வழங்கினர். 


Aavin Price: ஒரு கிலோ பன்னீர் விலை இவ்வளவா..? அதிரடியாக உயர்ந்த ஆவின் பால் பொருட்களின் விலை..!




இந்த வண்டிகளை பெறுவதற்கு நகராட்சி நிர்வாகம் தரைக்கடை வைத்துள்ள வியாபாரிகளிடம் தலா ரூபாய் 2000 கையூடாக பெற்றுக் கொண்டு வண்டிகளை வழங்கி உள்ளதாக தரைக்கடை வியாபாரிகள் வேதனையுடன் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் சீர்காழி நகராட்சியில்  பல்வேறு முறைகேடு நடைபெறுவதாகவும், நகராட்சி நிர்வாகம் சார்ந்த அனைத்துக்கும் கையூட்டு வாங்குவதாக பொதுமக்கள் பலரும் கூறிவரும் நிலையில், தற்போது இந்த குற்றச்சாட்டு சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், கையூட்டு பெற்ற நகராட்சி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


IRCTC Website Down : முடங்கியது IRCTC இணையதளம்... டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிக்கல்! காரணம் என்ன?




மேலும் இது தொடர்பாக நகராட்சி ஆணையரை தொடர் கொள்ள பல முறை முயற்சித்தபோதும் அவரின் தொலைபேசி எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் அவர் தரப்பு  விளக்கத்தை பெற முடியவில்லை. நகராட்சி ஆணையரின் தொலைபேசி எண் தொடர்ந்து சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ள நிலையில் மக்கள் பொது பிரச்சனை தொடர்பாக அவரை எவ்வாறு தொடர்பு கொள்வது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சீர்காழி சட்டமன்ற உறுப்பினர், நகராட்சி நகர மன்ற தலைவர் கையால் வழங்கப்பட்ட வண்டிகளுக்கு கையூட்டு பெற்றது தெரியுமா? அல்லது இந்த கையூட்டு பணத்தில் அவர்களுக்கும் பங்கு உள்ளதா என பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial  என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.