மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த ஈசானிய தெரு பகுதியை சேர்ந்தவர் 35 வயதான தனசேகரன். இவர் வைதீஸ்வரன்கோவில் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பன்னீர்செல்வம் நகரை சேர்ந்த தனசேகரன் உறவினர்களுக்கும், அதே பகுதியில் உள்ள தேவேந்திரன் மகன் 20 வயதான பிரதீப் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.




இது தொடர்பாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு சமாதானமாக சென்றுள்ளனர். இந்நிலையில் பிரதீப் அவரது உறவினரான கொண்டத்தூர், தெற்கு பண்டாரவடை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் 35 வயதான அமிர்தராஜ் என்பவருடன் வந்து தனசேகரன் உறவினர் வீட்டில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.




இது குறித்து தகவல் அறிந்த காவலர் தனசேகரன் விரைந்து வந்து பிரதீப் மற்றும் அமிர்தராஜ் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து இரு தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த காவலர் தனசேகரன் கட்டையால் மற்றும் கம்பியால் பிரதீப் மற்றும் அமிர்தராஜ் ஆகிய இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த இருவரும் அங்கேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்கள் இருவரையும் அருகில் இருந்தவர்கள்  மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 



இதனை தொடர்ந்து அமிர்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார்,  சீர்காழி ஈசானித் தெருவை சேர்ந்த 47 வயதான பாபு மற்றும் காவலர் தனசேகரன் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் தனசேகரன் கொடுத்த புகாரின் பேரில் பிரதீப், அமிர்தராஜ் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருதரப்பினர் இடையே விசாரணை நடத்தி வருகின்றனர்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் சட்டத்தை மதித்து குற்றவாளிகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டிய காவலர் சட்டத்திற்கு புறம்பாக எதிர் தரப்பினரை கண்மூடித்தனமாக கொலைவெறி தாக்குதல் நடத்திய சட்டத்தை மீறியது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என்றும், மற்ற காவலர்களும் இதனை பின்பற்றாமல் இருக்க காவலர் தனசேகருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் காவல் துறையை சேர்ந்த காவலர் சட்டத்தை மதிக்காமல் ரவுடி போல் நடந்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.