மும்பையைச் சேர்ந்தவர் வன்சிதா. 15 வயதான இந்த சிறுமி கடந்த 25-ந் தேதி வழக்கம்போல பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது, பள்ளிக்கு சென்ற இந்த சிறுமி, இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, தங்களது மகளை காணவில்லை என்று வன்சிதாவின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.


இந்த நிலையில், கடந்த 26-ந் தேதி மும்பை அருகே உள்ள வாலிவ் நகரத்தில் உள்ள விரார் ரயில்நிலையம் அருகே வன்சிதாவின் சடலத்தை போலீசார் கண்டெடுத்தனர்.  போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில், 21 வயதான சந்தோஷ் மக்வானா மற்றும் விஷால் அன்பவ்னே ஆகியோரை போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில் இவர்கள் இருவரும் இணைந்து வன்சிதாவை கொலை செய்த சம்பவத்தை ஒப்புக்கொண்டனர்.




போலீசார் விசாரணையில், சந்தோஷ் மற்றும் விஷால் இருவரும் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தினர். சந்தோஷ் வன்சிதாவும் கடந்த சில மாதங்களாக பழகி வந்தனர். இருவரும் பழகி வந்த விவகாரம் அவர்களது குடும்பத்திற்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, வன்சிதாவின் பெற்றோர்கள் வன்சிதாவை கண்டித்ததுடன், சந்தோஷையம் கண்டித்துள்ளனர். ஆனாலும், சந்தோஷ் வன்சிதாவை தொடர்ந்து சந்தித்து பேச முயற்சித்துள்ளார். ஆனால், இதை விரும்பாத வன்சிதா சந்தோஷை சாலையிலே வைத்து கன்னத்தில் அறைந்துள்ளார்.


இதனால், ஆத்திரமடைந்த சந்தோஷ் வன்சிதாவை பழிவாங்க நினைத்துள்ளார். இந்தியில் ஒளிபரப்பாகும் திரில்லர் வெப்சீரிசான கிரைம் பேட்ரோலில் வரும் காட்சிகளை அடிப்படையாக கொண்டு வன்சிதாவை கொலை செய்ய சந்தோஷ் திட்டமிட்டுள்ளார். அதற்காக தனது நண்பர் சந்தோஷையும் உதவிக்கு சேர்த்துக்கொண்டார். இருவரும் இணைந்து வன்சிதாவை கொலை செய்ய திட்டமிட்டனர்.


இந்த நிலையில், கடந்த 25-ந் தேதி வன்சிதாவிற்கு போன் செய்த சந்தோஷ் தனது நண்பர் வீட்டில் சந்தித்து பேச வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். ஆரம்பத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்த வன்சிதா, பின்னர் சம்மதித்துள்ளார். அங்கு சென்று வன்சிதா எதிர்காலத்தில் சந்தோஷை சந்திக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார். அப்போது, அங்கே ஏற்கனவே தயாராக இருந்த விஷாலிடம் சந்தோஷ் கத்தியால் குத்துமாறு சைகை காட்டியுள்ளார்.




சந்தோஷின் சைகை கிடைத்தவுடன் விஷால் தான் தயாராக வைத்திருந்த கத்தியால் நான்கு முறை வன்சிதாவின் வயிற்றில் கத்தியால் குத்தினார். இதை வன்சிதா தடுக்க முயன்றார். அப்போது,விஷாலிடம் இருந்து கத்தியை பிடுங்கிய சந்தோஷ் வன்சிதாவை ஆத்திரம் தீர கத்தியால் குத்தினார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த வன்சிதா சம்பவ இடத்திலே உயிரிழந்தார். பின்னர், அவர் அணிந்திருந்த டீ சர்ட் மற்றும் ஷாக்சாலே வன்சிதாவின் உடலை இறுக்க கட்டி பெரிய பையில் போட்டுள்ளனர். பின்னர், வாடகை ஆட்டோ ஒன்றை எடுத்துக்கொண்டு இருவரும் வன்சிதாவின் உடலை எடுத்துக்கொண்டு விரார் ரயில் நிலையத்தில் உள்ள பாலத்தில் இருந்து வன்சிதாவின் உடலை வீசிவிட்டு சென்றுள்ளனர். பின்னர், இருவரும் ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறிச்சென்றுள்ளனர்.


15 வயது பள்ளிமாணவியை வெப்சீரிஸ் பார்த்து திட்டமிட்டு இளைஞர்கள் இருவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க : 'ஜெய் ஸ்ரீராம்' கூறச் சொல்லி மிரட்டல்... இஸ்லாமிய ஊபர் ஓட்டுநர் மீது தாக்குதல்... காரை சேதப்படுத்திய மர்ம நபர்கள்!


மேலும் படிக்க : Crime : போதை அடிமைப்பழக்கத்தில் கூட்டு பாலியல் உறவில் ஈடுபடுகிறார்களா மாணவர்கள்? திருச்சியில் அதிர்ச்சி