கோடைகாலத்தில் கதவை திறந்துவைத்து தூங்கியவர்களின் வீடுகளை குறிவைத்து 3 வருசமா கொள்ளையடித்து வைத்த ஒரே குடும்பத்தை சேர்ந்த கொள்ளை கும்பலை காவல்துறை கைது செய்தது.

 

மதுரை மாவட்டம் சிலைமான், கருப்பாயூரணி திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 3  ஆண்டுகளாக கோடை காலங்களில்  திறந்து இருக்ககூடிய வீடுகளை குறிவைத்து   வீடுகளில் புகுந்து வீடுகளில் உள்ள நபர்களை மிரட்டி தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடிப்பதோடு, பீரோவில் இருக்கும் நகைகளையும்  கொள்ளையடித்து செல்வதாக 20 க்கும் மேற்பட்ட புகார்கள் சிலைமான் மற்றும் கருப்பாயூரணி காவல்நிலையத்திற்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த கொள்ளை வழக்கில் கூடுதல் கவனம் செலுத்திய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் ஊமச்சிகுளம் காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணன் சிலைமான் காவல் ஆய்வாளர் மோகன் தலைமையிலான தனிப்படை ஒன்று அமைத்து உத்தரவிட்டார்.

 



 

இந்த தனிப்படை காவல்துறையினர் கொள்ளை நடந்த இடங்களில் ஒரு மாதிரியாக பார்ப்பதற்கு அப்பாவிகள் போலவும் அதில் வயதான பெண் ஒருவரும் அவர்களுடன் மூன்று இளைஞர்கள் சென்று வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த 4 பேர் கொண்ட கும்பல் குறித்த விசாரணையை நடத்தியபோது இந்த கும்பலானது நேற்று கல்மேடு பகுதியில் வழியாகச் சென்றுள்ளதும்,  கல்மேடு பகுதியில் மீண்டும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட உள்ளதாகவும் ரகசிய தகவல் தனிப்படை காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது.

 

இதனையடுத்து கல்மேடு சந்திப்பு பகுதியில் தனிப்படை காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். அப்போது பைக்கில் கூலித்தொழிலாளிகள் போல வந்த  இரு இளைஞர்கள் பைக்கில் கொள்ளை அடிப்பதற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் கையுறை ஆகியவற்றை மறைத்திருப்பது தெரியவந்தது.



 

இதனைத்தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் அவர்களது ஸ்டைலில் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் இளமனூர்புதூரைச் சேர்ந்த சின்னசாமி (என்ற நரி)  மற்றும் சோனைச்சாமி ஆகிய இருவரும் சகோதரர்கள் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துசென்று நடத்திய விசாரணையில்  இந்த இருவரும் இவர்களுடைய அண்ணன் பெரியகருப்பசாமி மற்றும் அவருடைய தாயார் ஆசை பொண்ணு ஆகியோரும் ஒரே குடும்பாக சேர்ந்து  கடந்த மூன்று ஆண்டுகளாக சிலைமான் கருப்பாயூரணி , திருமங்கலம் ஆகிய பகுதிகளில் கோடை காலங்களில் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கக்கூடிய நபர்களின் வீடுகளை கண்டறிந்து அவர்கள் வீட்டுக்குள் சென்று நகைகளை திருடி வந்ததும் திருடிவிட்டு அந்த பகுதியில் ஏதோ கூலி வேலைக்கு வந்தது போல அப்பாவிகளாக நடந்து சென்றதும் தெரியவந்துள்ளது.

 



 

இதனையடுத்து நான்கு பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களின் வீடுகளில் சென்று விசாரணை நடத்திய போது கொள்ளையடித்த நகைகளை அவர்களது வீடுகளை சுற்றியும் புதைத்து வைத்து அதன் மேலே சிமெண்ட் பூசி மறைத்து வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  இதனையடுத்து வீட்டை சுற்றி வைத்திருந்த 180 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து ஒன்பது லட்சம் ரூபாய் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர்.



 

கொள்ளை கும்பலை கைது செய்த தனிப்படை காவல்துறையினருக்கு மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் பாராட்டு தெரிவித்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது,”கடந்த மூன்று ஆண்டுகளாக திறந்த வீடுகளை மட்டும் குறிவைத்து கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் நான்கு பேரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் உள்ள வீடு மற்றும் வாகனங்களை சட்டப்படி பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம் என தெரிவித்தார். மேலும் இவர்களுடன் வேறு ஏதும் கொள்ளை வழக்குகளில் தொடர்பில் உள்ளார்கள் என்பது குறித்தான விசாரணையும் நடத்தப்பட்டு வருவதாகவும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பின்பாக  காவல்துறை விசாரணைக்கு எடுத்து முழுமையான விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.