கிராம நிகழ்ச்சியில் ஏற்பட்ட நட்பு

 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர் பல்வேறு கிராமப்புற நிகழ்வுகளுக்கு மைக் செட் போடும் தொழில் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் அவர் மனைவியை பிரிந்த நிலையில் தனது இரண்டு பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இதனிடையே நாடக மேடை பாடகியான மதுரை மதிச்சியம் பகுதியைச் சேர்ந்த கிராம குயில் கவிதா என்பவரும் கணவரை பிரிந்து தனது 2 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் மேடை நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு கவிதாவும், நாகராஜனும் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளனர்.



 

கசந்த நட்பு

 

இதனை தொடர்ந்து கவிதா தனது இரண்டு பிள்ளைகளை நாகராஜனின் தாயார் வீட்டிலும் நாகராஜனின் இரண்டு பிள்ளைகளை கவிதாவின் தாயார் வீட்டிலும் தங்க வைத்து படிக்க வைத்துள்ளனர். மேலும் கவிதாவும், நாகராஜனும் மதுரை மேலூர் அருகேயுள்ள பதினெட்டான்குடி கிராமத்தில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். அங்கிருந்தபடி பல்வேறு மேடை நிகழ்ச்சிகளுக்கு மைக் செட் மட்டும் மேடை பாடல் பாடுவதற்காக சென்று வந்துள்ளனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த திங்கள் கிழமை அன்று கவிதா மதிச்சியத்தில் தனது தாயார் வீட்டிற்கு கோவில் விழாவிற்காக வந்து தங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த கணவர் நாகராஜன் கவிதாவை ஏ.டி.எம்., அழைத்துசென்று வங்கிக் கணக்கிலிருந்து 65 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளார்.



 

நெஞ்சு வலி

 

இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இருவரும் காலையில் பேசிக்கொண்டிருந்தபோது நாகராஜன் திருப்பரங்குன்றத்தில் வீடு எடுத்து தங்குவோம் என கூறியுள்ளார். அதற்காக பணம் எடுத்துள்ளேன் என கூறியபோது தனக்கு விருப்பமில்லை எனவும், தனது பணத்தை திரும்பத் தருமாறு கவிதா கேட்டுள்ளார். அப்போது இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது சமாதானம் என கூறி அருகில் சென்று கழுத்தை்நெறித்து கொலை செய்துள்ளார். இதனால் கவிதா கத்தி கூச்சலிட்ட நிலையில் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்த போது திடீரென தனது மனைவிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி நாகராஜன் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்துள்ளார்.



 

மனைவிக்கு  ஹார்ட் அட்டாக்

 

இதனையடுத்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நேரடியாக கவிதாவின் உடலை பரிசோதித்த போது உயிர் இல்லை என கூறியதையடுத்தும், கணவன் தனது நாடகத்தை மீண்டும் தொடரும் வகையில் மனைவி கவிதாவை ஆட்டோ மூலமாக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது மருத்துவர்களும் கவிதா இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து கணவன் நாகராஜன் தனது மனைவி ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டதாக மதிச்சயம் காவல்நிலையத்தில் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து கவிதாவின் உடலை உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மதிச்சியம் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.



 

உடற்கூராய்வில் வெளிவந்த உண்மை

 

இதனை தொடர்ந்து தற்போது உடற்கூராய்வு மருத்துவ அறிக்கையில் கவிதாவின் கழுத்து எலும்புகள் உடைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து நாகராஜனிடம் நடத்திய விசாரணையில் மனைவுடன் நடைபெற்ற வாக்குவாதத்தின்போது கவிதாவை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து கொலை வழக்கில் கணவர் நாகராஜனை கைது செய்த மதிச்சியம் காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.