செல்போனுக்கு ஆசைப்பட்டு டாக்சி டிரைவரை கொலை செய்த ராணுவ வீரர்: மதுரை அருகே பயங்கரம்!

அலங்காநல்லூரில் கார் மற்றும் செல்போனுக்காக கால்டாக்ஸி உரிமையாளரை கடத்தி கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு காரை திருடி சென்ற ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

Continues below advertisement
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோட்டைமேடு பகுதியில் கடந்த வாரம் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்த பாண்டியன் என்ற கால்டாக்ஸி ஓட்டுநர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை தொடர்பாக அலங்காநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

 கால் டாக்ஸி டிரைவரை  வண்டி வாடகைக்கு வேண்டும் என அழைத்து சென்ற  ராணுவ வீரரான மார்நாடு என்ற வாலிபர், அலங்காநல்லூர் பகுதிக்கு காரை அழைத்து சென்று, மறைத்து வைத்திருந்த கத்தியால் கால்டாக்ஸி உரிமையாளர் பாண்டியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு உடலை வயல்வெளியில் வீசியுள்ளார்.  அங்கிருந்து கார், மற்றும் செல்போன், பணத்தை திருடி சென்றுள்ளார். கார் மற்றும் செல்போனுக்காக இந்த கொலையை ராணுவ வீரர் செய்தது தெரியவந்துள்ளது.

கார் சென்ற இடத்தை சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் ஆய்வு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள தொட்டியபட்டி பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் மார்நாடு, காரை கடத்தி சென்று கண்மாயில்  மறைத்துவிட்டு சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ராணுவ வீரரான மார்நாடை கைது செய்த அலங்காநல்லூர் போலீசார் அவரிமிருந்த கார் மற்றும் 3 செல்போன்களையும் மீட்டு மார்நாடை வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். கார் மற்றும் செல்போனுக்காக கார் உரிமையாளரை கொலை செய்து காரை திருடி சென்ற ராணுவ வீரரின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து காவல்துறையினர்...,” மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  வீ.பாஸ்கரன் அவர்கள் உத்தரவின்பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினரின் சீரிய முயற்சியினால் இச் சம்பவத்தில் ஈடுபட்ட மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா தொட்டியபட்டி சேர்ந்த முனியாண்டி மகன் மார்நாடு என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது. அவருடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதம் மற்றும் இறந்த நபரின் நான்கு சக்கர வாகனத்தையும் தனிப் படையினர் கைப்பற்றினர். மேற்படி மார்நாடு என்பவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்சமயம் இவர் ராணுவத்திற்கு வேலைக்குச் செல்லாமல் இருந்து வருகிறார் என்று விசாரணையில் தெரிய வருகிறது. இச்சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்டு துரிதமாக எதிரியை கைது செய்த தனிப்படையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  வீ. பாஸ்கரன் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.”
Continues below advertisement
Sponsored Links by Taboola