வெறோரு பெண்ணுடன் நிச்சயம் செய்ததால் ஆத்திரமடைந்த காதலி, காதலன் முகத்தை சிதைத்த சம்பவம் டெல்லியை அதிர வைத்துள்ளது. 


டெல்லியின் புறநகர் பகுதியான நிகல் விகாரில் ஓம்கார் என்ற 24 வயது இளைஞர் வசித்து வருகிறார். இவர் கணினி வரைகலை வடிவமைப்பாளராக வேலை செய்து வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரங்கோலா பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 3 பேர் கத்தியால் முகத்தை கிழித்தனர். இதில் படுகாயமடைந்த ஓம்கார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் முகத்தில் தையல்கள் போடப்பட்டுள்ளது. இதனால் அவரின் முக அமைப்பே மாறிவிட்டது. 


இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அந்த 3 பேரை தேடி வந்தனர். இதனிடையே நேற்று துவாரகா மோர் பகுதியில் சுற்றிய விகாஷ் என்ற வாலிபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது  அவரும், நண்பர்கள் 2 பேரும் இணைந்து ஓம்காரை தாக்கியதாக ஒப்புக்கொண்டார். மேலும் இந்த விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்களும் வெளியாகியுள்ளது. 


அதன்படி 24 வயதான ஓம்கார், தன்னுடன் பணியாற்றிய 30 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் பல்வேறு இடங்களுக்கு பயணப்பட்டும், ஒன்றாகவும் வாழ்ந்து வந்துள்ளனர். இதனிடையே சமீபத்தில் ஓம்கார் வேறொரு பெண்ணை நிச்சயம் செய்துள்ளார். இதற்கு காதலி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஓம்கார் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 


இதனால் அவரை பழிவாங்க நினைத்த அப்பெண் கூலிக்கு அடியாட்களாக செயல்படும் 3 பேரிடம் ரூ.30 ஆயிரம் பணத்தை கொடுத்து முகத்தை சிதைக்குமாறு கூறியுள்ளார். மேலும் ஆசிட் பாட்டில் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் திட்டமிட்டபடி 3 பேரும் ஓம்காரை தாக்கிய நிலையில் அவரது முகத்தில் ஆசிட்டை வீச முடியவில்லை. இதனைத் தொடர்ந்து கத்தியால் முகத்தை கிழித்துள்ளனர். 


இந்நிலையில் விகாஷ் கொடுத்த தகவல் அடிப்படையில் அப்பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், நிச்சயதார்த்தம் செய்த நிலையில் ஓம்காரிடம் கல்யாணத்தை நிறுத்த சொன்னதாகவும், அதற்கு தன்னுடன் எடுத்த தனிப்பட புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியதால் ஓம்காரை பழிதீர்க்க நினைத்ததாகவும் கூறியுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய இன்னும் 2 பேரை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.