கிருஷ்ணகிரியில் மாமியாரை, தனது ஆண் நண்பருடன் இணைந்து மருமகள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகாவில் உள்ள சிங்காரப்பேட்டையில் கரியபெருமாள் வலசை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த 60 வயதுமிக்க அலமேலு என்ற பெண் திடீரென காணாமல் போனார். அவரை இளைய மகன் சேட்டு என்பவர் தன் நண்பர்களுடன் பல்வேறு இடங்களில் தேடினார். அப்போது அந்தப் பகுதியில் உள்ள காட்டில் ஒரு பெண் உடல் எரிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அருகே சென்று பார்த்தபோது அது அலமேலு என தெரிய வந்தது. 


இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊத்தங்கரை துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் மற்றும் சிங்காரப்பேட்டை போலீசார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து அலமேலு உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அலமேலுவின் மருமகள் பவித்ரா தான் தான் இந்த கொலைக்கு காரணம் என்ற திடுக்கிடும் தகவல் வெளியானது. 
மேலும் பவித்ராவின் ஆண் நண்பர் மணிகண்டனும் இதற்கு உடந்தையாக செயல்பட்டது தெரிய வந்ததால் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். 


இதில், அலமேலுவின் மூத்த மகனான ஏழுமலைக்கும், அவரின் அண்ணன் மகளான பவித்ராவுக்கும் 3 ஆண்டுகளுக்கும் முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் ஏழுமலை கோவையில் வேலை செய்து வந்தார். இதனால் தனிமையில் வசித்து வந்த பவித்ராவுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் மணிகண்டன் பழக்கம் ஏற்பட்டது.


பக்கத்து வீடு என்பதால் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் இருவரும் தனிமையில் நேரம் செலவிட்டு வந்தனர். இந்த விவகாரம் நாளடைவில் அலமேலுவுக்கு தெரிய வந்த நிலையில், தன் மகனுக்கு துரோகம் செய்யாதே என கண்டித்துள்ளார். ஆனாலும் பவித்ரா மணிகண்டனுடனான தனது உறவை தொடர்ந்துள்ளார். இதன்பின்னர் பவித்ரா ஆடு மேய்ப்பதால் மணிகண்டனுடனான உறவை காட்டுப்பகுதுயில் தொடர்ந்துள்ளார். 


மீண்டும் ஒருமுறை அலமேலுவிடன் இருவரும் சிக்க, அவர் கண்டித்துள்ளார். இதனால் மாமியாருடம் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே மணிகண்டன் அலமேலு கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் உடலை எரித்தால் அடையாளம் தெரியாது என வீட்டில் உள்ள பெட்ரோலை எடுத்து வந்து ஊற்றி நெருப்பு வைத்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளனர். ஆனால் உடல் பாதி மட்டுமே எரிந்திருக்கிறது. 


வீட்டுக்கு சென்ற பவித்ராவும், மணிகண்டனும் ஒன்றுமே நடக்காதது போல இருந்துள்ளனர் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.