கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அடுத்த  குட்டூரை கிராமத்தை சேர்ந்தவர் மாரப்பன் வயது ( 45) இவர் கூலித்தொழில் செய்துவருகிறார். இவருக்கு குடிக்கும் பழக்கம் உள்ளது. இவர் ராயக்கோட்டை தக்காளிமண்டி அருகில் உள்ள மதுக்கடை முன்பு இறந்து கிடந்துள்ளார். இவரை யாரோ  தலையில் தாக்கிய காயம் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக அவரது மனைவி குண்டம்மாள் வயது (35) ராயக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.


அதில் தனது கணவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. என்னிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தார்.  இதனால் நான் என்னுடைய கணவருக்கு பணம் கொடுக்கவில்லை என்றும் இதனால் வீட்டில் இருந்து வெளியே சென்ற கணவர், வேறு யாரிடமோ பணம் வாங்கி அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு, போதையில் தவறி விழுந்து இறந்துள்ளார்’ என கூறிய காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.



இந்த புகாரின் அடிப்படையில் ராயக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் சுப்பிரமணியம் மற்றும் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மேலும் மாரப்பனின் உடலை காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாரப்பன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் மாரப்பன் தலையில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 


அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். முதல் கட்டமாக இறந்து போன மாரப்பனின் மனைவி குண்டம்மாளிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். 


 




 


விசாரணையில் குண்டம்மாள் காவல்துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில்:-


எனக்கும், மாரப்பனுக்கும் திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். எனது கணவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் குடித்து விட்டு வந்து என்னிடம் அடிக்கடி தகராறு செய்வார். இந்த நிலையில்  எனக்கும், சஜ்ஜலப்பட்டியை சேர்ந்த விவசாயி சிவசங்கர் என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. சிவசங்கருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான். சிவசங்கர் என்னை அடிக்கடி தனிமையில் வந்து சந்திப்பார். இது எனது கணவருக்கு தெரிய வந்தது. அவர் என்னை பல முறை கண்டித்தார். இதனால் அவர் இருக்கும் வரையில் நாம் வாழ முடியாது என்று முடிவு எடுத்து. அவரை தீர்த்து விடலாம் என்று எனது கள்ளக்காதலனுக்கு ஐடியா நான் கொடுத்தேன். 


அதனையடுத்து  நான் கொடுத்த  திட்டத்தின்படி இரவு மது குடிப்பதற்காக வெளியே சென்ற எனது கணவரை, சிவசங்கர் அழைத்து சென்றார். அப்போது மது போதையில் இருந்தபோது எனது கணவரின் பின்புற மண்டையில் நான் இரும்பு கம்பியால் அடித்தேன். இதில் அவர் அங்கேயே கீழே விழுந்து உயிரிழந்தார் . இதையடுத்து தக்காளி மண்டி அருகில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு நாங்கள் இருவரும் உடலை போட்டுவிட்டு அங்கு இருந்து தப்பித்துவிட்டோம் 



இந்நிலையில் மறுநாள், காணாமல் போன எனது கணவரை தேடி நடித்ததாகவும், அதில் எனது கணவர் உடல் மதுக்கடை அருகில் கிடந்ததாக நானே காவல்துறையினரிடம் தெரிவித்தேன். என்னிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து விட்டு எனது கணவர் சென்றதாகவும், பின்னர் மது போதையில் கீழே விழுந்து இறந்ததாகவும், அனைவரையும் நம்ப வைத்தேன். ஆனால் எனது கணவரின் தலையில் இருந்த காயத்தை கொண்டு, அவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இறந்ததை காவல்துறையினர் எங்களை கண்டுபிடித்து விட்டனர்” எனக் கூறியுள்ளார்.


குண்டம்மாள், தனது கள்ளக்காதலன் சிவசங்கர் என்பவருடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து குண்டம்மாளையும், சிவசங்கரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.  தகாத நட்புக்காக கணவனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது