கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆல்வின் லாயுடு பர்க் (31)  பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 14 ஆம் தேதி பெங்களூரில் இருந்து தன்னுடைய காரில் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணகிரியை அடுத்த திம்மாபுரம் பகுதியில் முன்னே சென்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாரத விதமாக ஆல்வின் லாயுடு பர்க் தனது காரை மோதி உள்ளார். அதில் இருச்சக்கர வாகனத்தில் பயணம் செய்த மூன்று நபர்களும் கீழே விழுந்து காயமடைந்து உள்ளனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.



இந்த நிலையில் காரை ஓட்டி வந்த ஆல்வின் லாயுடு பர்க் இந்த விபத்து குறித்து காவல் நிலையத்திற்க்கு சென்றுவிடலாம் என்று அங்கு உள்ளவர்களிடம் கூறி உள்ளார். ஆனால் அவ்வழியாக வந்த மூன்று நபர்கள் கொண்ட கும்பல் அவரை தடுத்து நிறுத்தி இந்த விபத்து குறித்து காவல் நிலையம் செல்ல வேண்டாம் எனவும், இதை சுமூகமாக நாமே பேசி முடித்துக்கொள்ளலாம் எனவும் கூறி உள்ளனர். இதனை நம்பிய ஆல்வின் லாயுடு பர்க் அவர்களுடன் சென்றுள்ளார். ஆனால் அந்த கும்பல் அவரை காவேரிபட்டினத்தில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் கடத்தி சென்று அடைத்து வைத்து அவரை மிரட்டி 1.5 லட்சம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் பணம் தரவில்லை என்றால் உன்னை விடுவிக்க முடியாது என்று கூறியும் உன்னை கொன்றுவிடுவோம் என்று ஆல்வின் லாயுடு பர்கை மிரட்டல் விடுத்துள்ளனர்.



அதனை தொடர்ந்து அச்சமடைந்த ஆல்வின் லாயுடு பர்க் இதுகுறித்து அவருடைய தந்தையிடம் தகவல் அளித்துள்ளார். பின்னர் ஆல்வின் லாயுடு பர்க் தந்தை காவேரிபட்டினம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் உடனடியாக இந்த கடத்தல் சம்பவத்தை குறித்து விசாரணை நடத்தினர். விசாரணை நடத்தியதில் ஆல்வின் லாயுடு பர்கை கடத்தியவர்கள் காவேரிபட்டினம் பகுதியை சேர்ந்த சந்தோஷ், அன்பரசன் மற்றும் லோகநாதன் ஆகிய மூன்று நபர்கள் கொண்ட கும்பல் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து ஆல்வின் லாயுடு பர்கை மீட்டனர். பின்னர் அவர்கள் மூன்று நபர்கள் மீதும் கடத்தல் வழக்குப்பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர். விபத்து ஏற்படுத்தியவரை கடத்திச்சென்று 1.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் காவேரிப்பட்டினம் பகுதியில் இதுபோன்ற குற்றச் செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இதனை காவல்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்