Just In





ஓசூர் நகர ஸ்ரீராம் சேனா தலைவர் கத்தியால் குத்திக்கொலை
’’கொலை தொடர்பாக திலக், அவரது நண்பர்களான பவன் (23), மூர்த்தி (20), அப்பு என்கிற ராகேஷ் (20), ஹேமந்த் (21), சுரேஷ் (20) ஆகிய 6 பேர் கைது’’

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த மத்திகிரி அருகே உள்ள சொப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திம்மராயப்பா என்பவரின் மகன் மோகன்பாபு (25). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில் ஸ்ரீ ராம் சேனா என்ற அமைப்பின் ஓசூர் நகர செயலாளராகவும் பொறுப்பில் இருந்து வருகிறார். 4 மாதங்களுக்கு முன் அதே ஊரைச்சேர்ந்த முருகேஷ் என்பவரின் வாகனமும் ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் மோகன்பாபுவின் இருசக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது முதல் மோகன் பாபுவுக்கும் முருகேஷின் மகன் திலக்கிற்கும் (20) தகராறு இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு மோகன்பாபு, அவரது நண்பர்களுடன் வீட்டுக்கு அருகில் உள்ள மாந்தோப்பு பக்கமாக அமர்ந்து பேசி கொண்டு இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த திலக் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் மோகன்பாபுவிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த திலக் கோஷ்டியினர் தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து மோகன்பாபுவின் வயிற்றிலும் கழுத்திலும் சரமாரியாக குத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
அதனை தொடர்ந்து கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த மோகன்பாபுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மோகன் பாபு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார் . இதை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் மத்திகிரி காவல்நிலையத்தின் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து இந்த கொலை தொடர்பாக திலக், அவரது நண்பர்களான பவன் (23), மூர்த்தி (20), அப்பு என்கிற ராகேஷ் (20), ஹேமந்த் (21), சுரேஷ் (20) ஆகிய 6 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது கூட்டமாக வருதல், கலகம் விளைவித்தல், கொலை செய்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.