கேரளா அருகே காதலித்த மறுத்த 23 வயது இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கூத்து பறம்பு அருகே உள்ள பானூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவரது மகள் 23 வயதான விஷ்ணு பிரியா . இவர் அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உள்ள மருத்துவ ஆய்வகத்தில் பணிபுரிந்து வந்தார். விஷ்ணு பிரியாவின் தந்தையின் நெருங்கிய உறவினர் ஒருவர் நேற்று மரணமடைந்தார். இதையடுத்து அவரது பெற்றோர், உறவினரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்காக சென்றிருந்தனர்.


இதனால் விஷ்ணு பிரியா மட்டுமே வீட்டில் தனியாக இருந்தார். நேற்று மதியம் அவரது தாய் வீட் டுக்கு வந்தபோது படுக்கையறையில் விஷ்ணு பிரியா கழுத்து துண்டான நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து பானூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணை நடத்தியதில், கூத்துபறம்பு மானந்தேரி பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஷியாம்ஜித் என்பவரின் போனிலிருந்து விஷ்ணு பிரியாவின் போனுக்கு கடைசியாக அழைப்பு வந்தது தெரிய வந்தது. ஷியாம்ஜித்திடம் விசாரித்ததில், விஷ்ணு பிரியாவை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். தன்னை காதலிக்க மறுத்ததால் ஆத்திரத்தில் கழுத்தை அறுத்துக் கொன்றதாக அவர் போலீசிடம் தெரிவித்தார்.


இதுகுறித்து அவர் அளித்த வாக்குமூலத்தில், “விஷ்ணு பிரியா என்னிடம் இருந்து தொடர்ந்து விலகிக்கொண்டு சென்றார். எங்கே என்னை விட்டு போய்விடுவாளோ என்ற பயத்திலும், புதிதாக யாரையும் காதலித்து விடுவாரோ என்ற பொறாமையிலும் கழுத்து அறுத்து கொலை செய்தேன்” என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


பெண்களுக்கு எதிரான வன்முறைகள்: 


பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை என்பது தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. குடும்ப வன்முறைக்கு உள்ளாவதாக 38.2 சதவிகிதம் பெண்கள் தெரிவித்துள்ளார்கள். இது, குடும்ப நல ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. ஆய்வுக்கு உட்பட்ட பெண்களில் மூவரில் ஒருவர் குடும்ப வன்முறையை சந்திப்பதை எடுத்துக்காட்டுகிறது. 


அவர்களில் உடல் ரீதியிலான வன்முறையை எதிர்கொள்வோர் 28.7 சதவிகிதம், பாலியல் வன்முறையை எதிர்கொண்டிருப்போர் 9.1 சதவிகிதம், உளவியல் ரீதியாக வன்முறைக்கு ஆளாகியிருப்போர் 12.6 சதவிகிதம், உணர்வுரீதியான வன்முறையை சந்தித்தவர் 15.4 சதவிகிதம் ஆகும்.


திருமணத்திற்கு பின் ஒருமுறையாவது அறைவது, குத்துவது உள்ளிட்டு உடல் ரீதியிலான வன்முறையை எதிர்கொண்டிருப்பதாக 28.7 சதவிகிதம் பேர் தெரிவித்திருக்கிறார்கள். சுய மரியாதைக் குறைவாக நடத்தப்படுவதும் அதிகமாக இருக்கிறது. வன்முறைக்கு ஆளான பெண்களில் 32.3 சதவிகிதம் பேர் மருத்துவ சிகிச்சையை நாட நேர்ந்திருப்பது நிலைமையின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது. 


குடும்ப வன்முறையில் ஈடுபடும் ஆண்கள், பெரும்பாலும் குடிப்பழக்கம் மிகுதியாக கொண்டிருப்பதை ஏற்கனவே ஆய்வுகள் வெளிப்படுத்தின. இந்த ஆய்விலும் அதுவே வெளிப்பட்டுள்ளது. குடும்ப வன்முறையைத் தடுக்க சட்டம் வந்த பின்னரும் கூட, ஆணாதிக்க சமூக கட்டமைப்பில், இது குற்றம் என்பதை விட, பெண்கள் சகித்து கொண்டு அல்லது அனுசரித்து போக வேண்டிய விஷயம் என்பதாகவே பார்க்கப்படுகிறது. 


திருமணத்துக்குப் பின், மனைவி தனித்துவம் இழந்து கணவனின் உடமையாகக் கருதப்படும் பெண்ணடிமைத்தன சிந்தனையின் வெளிப்பாடே இது. படித்த பெண்களும், பொருளாதார ரீதியாக சுயமாக முடிவு மேற்கொள்வோரும் வன்முறைக்கு ஆளானாலும், அது ஓரளவு குறைவாக உள்ளது என்பதும் ஆய்வில் வெளிப்பட்டுள்ளது.