சமூக வலைதளங்களின் மூலம் ஏற்படும் காதல் ஒரு சில நேரங்களில் சிக்கலில் முடிந்துவிடும். அந்தவகையில் தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் தொழிலதிபர் ஒருவருக்கு வலை விரித்து பெண் மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக இன்ஸ்டாகிராம் மூலம் பெண் ஒருவர் குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார். அந்த குறுஞ்செய்தியில் தான் வீட்டில் தனியாக இருப்பதாக கூறியதாக தெரிகிறது. அத்துடன் அவருடைய கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதாகவும் அதனால் இவர் தனியாக வீட்டில் இருப்பதாகவும் கூறியுள்ளார். அங்கு வந்தால் உல்லாசமாக இருக்கலாம் என்று அவர் தெரிவித்ததாக தெரிகிறது. 


அதைத் தொடர்ந்து தொழிலதிபர் அந்த பெண் தெரிவித்த முகவரிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு ஒரு இளம் பெண் இருந்துள்ளார். அதன்பின்னர் அந்த வீட்டிற்கு 5 நபர்கள் புகுந்துள்ளதாக தெரிகிறது. மேலும் தொழிலதிபரை மிரட்டி அவரை நிர்வாணப்படுத்தி வீடியோ மற்றும் படம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் இவரிடம் இருந்த வங்கி கார்டுகள், பணம், தங்க நகை ஆகியவற்றை பறித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவருடைய படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவதாக மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. 


 


மேலும் தொழிலதிபரை அந்த கும்பல் கடத்தி சென்று ஒரு இடத்திற்கு கொண்டு போகும் வழியில் அவர் தப்பியுள்ளார். அங்கு இருந்து தப்பி நேரடியாக பாலக்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் தொழிலதிபரை மிரட்டிய 6 பேர் கொண்ட கும்பல் தொடர்பாக காவல்துறைக்கு தெரியவந்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் ஒரு தம்பதி உட்பட 6 பேரை கைது செய்தனர். 


 


கேரளாவின் கண்ணூரைச் சேர்ந்த கோகுல் தீலிப்(29) மற்றும் அவருடைய மனைவி தேவு(24), கோட்டயத்தைச் சேர்ந்த சரத்(24), அஜித்(20), வினய்(24) மற்றும் ஜிஷ்ணு உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சரத் என்ற நபர் தொழிலதிபருக்கு இன்ஸ்டாகிராமில் பெண் போல் குறுஞ்செய்தி அனுப்பியது தெரியவந்துள்ளது. 


 


அத்துடன் கோகுல் தீலிப் மற்றும் தேவு ஜோடி ஒரு யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் யூடியூப் சேனலில் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளனர். அத்துடன் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்த்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு தேவைப்படும் பணத்திற்காக இவர்கள் அவ்வப்போது இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. இவர்கள் 6 பேரை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைதுள்ளனர். தொழிலதிபர் ஒருவரை இன்ஸ்டாகிராம் மூலம் கும்பல் ஒன்று மிரட்டியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் போல் வேறு யாரையும் இந்த கும்பல் ஏமாற்றியுள்ளதா என்ற கோணத்தில்  காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.




மேலும் படிக்க: ரூ.11 ஆயிரம்தான்... நாள் முழுவதும் உல்லாசம்: நம்பி ஏமாந்த உதவிப் பேராசிரியர்; காவலன் செயலியால் சிக்கிய பெண்கள்