காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளையார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (42). இவருக்கு ராகசுதா (31) என்ற மனைவியும், 13 வயதில் செல்வவிஜயன் என்ற மகனும், 8 வயதில் வித்யஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். பார்த்திபன் கடந்த 10 ஆண்டுகளாக சென்னையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றி விட்டு ஓராண்டுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்துள்ளார்.




இவர், பணிச்சுமை அதிகமாக இருப்பதாக கூறி ஒரு மாதத்திற்கு விடுமுறை எடுத்துக்கொண்டு ஓய்வுபெறப் போவதாக மனைவியிடம் கூறியுள்ளார். இதற்கிடையில், காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் உள்ள தனது வீட்டில் பார்த்திபன் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதை பார்த்த உறவினர்கள் அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். 4 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பார்த்திபன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.




பார்த்திபன் தற்கொலை செய்த சம்பவம் சக அலுவலர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் கடும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், பணிச்சுமைதான் காரணமா வேறு யாரோ அவருக்கு அழுத்தம் கொடுத்தார்களா என்று கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Suicidal Trigger Warning.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)