குளித்தலையில் வாய்க்காலில் குளித்தபோது நீரில் மூழ்கி பலியான அதிமுக நிர்வாகி உடல் மீட்பு




கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தேவதானத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் தியாகராஜன் 55. இவர் குளித்தலை ஒன்றிய அம்மா பேரவை செயலாளராக இருந்து வருகிறார். இவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் வாய்க்காலில் குளிக்க சென்றுள்ளார். அப்போது வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்தபோது  எதிர்பாராத விதமாக வலிப்பு நோய் ஏற்பட்டதில் நீரில் அடித்து செல்லப்பட்டார்.




 


வெகுநேரமாகி வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் தேடி வந்த போது வாய்க்கால் படித்துறையில் அவரின் செருப்பு துண்டு இருப்பதை மட்டும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். வாய்க்கால் நீரில் அடித்து சொல்லப்பட்டாரா என்று முசிறி தீயணைப்பு துறையினர் உதவியுடன் ஒருநாள் முழுவதும் தேடி வந்த நிலையில் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.


 




 


நேற்று காலை மீண்டும் உடலை தேடும் பணி துவங்கிய நிலையில் மருதூர் பஸ் ஸ்டாப் அருகே உள்ள வாய்க்கால் கரையில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.