டாட்டூ நிபுணர்

 

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜகோபால் பூபதி தெருவை சேர்ந்தவர் அறிவழகன். அவருக்கு அமுதா என்ற மனைவியும் சவுமியா என்ற மகளும், சரண்சிங் என்ற மகனும் உள்ளனர். சரண்சிங் காஞ்சிபுரம் கீரை மண்டபம் அருகே டாட்டு கடை வைத்து நடத்தி வருகிறார்.மேலும் வணிகர் வீதி பகுதியில் அசைவ உணவகம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர் வீட்டுக்கு அருகே உள்ள விஷ்ணு என்பவர் குடும்பத்திற்கும், சரண்சிங் குடும்பத்திற்கும் கடந்த 3 தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது.



முன்பகை

 

 

இதன் தொடர்ச்சியாக நேற்று நள்ளிரவு இரவு 11 மணி அளவில் விஷ்ணு, தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு,  சரண்சிங் வீட்டில் இல்லாத சமயத்தில், சரண்சிங் குடும்பத்தினரை தாக்கியுள்ளார். தகவலறிந்து தனது வீட்டிற்கு வந்த சரண்சிங் விஷ்ணுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆவேசமடைந்த விஷ்ணு மற்றும் விஷ்ணுவின் தாயார் சித்ரா, தம்பி சிவா மற்றும் 3 நண்பர்களுடன் சேர்ந்து சரண்சிங் குடும்பத்தினரை கடுமையாக தாக்கினார். 



மேலும் கத்தரிக்கோல் மற்றும் ஸ்குரு டிரைவர் போன்ற கூர்மையான  ஆயுதங்களைக் கொண்டு சரண் சிங் மற்றும் அவருடைய குடும்பத்தினரை குத்தினர். அதில் படுகாயமடைந்த சரண்சிங் மற்றும் அவருடைய குடும்பத்தினர் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி சரண்சிங் உயிரிழந்தார். 

 

 

குறைத்த நாய்

 

இது குறித்து அறிந்து விரைந்து வந்து சிவகாஞ்சி காவல்துறையினர்  நடத்திய முதல்கட்ட விசாரணையில் , கொலை செய்த விஷ்ணு கஞ்சா போதைக்கு அடிமையானவர் என தெரியவந்தது.  வேண்டும் என்றே முன்பகை காரணமாக தனது நண்பர்களுடன் கஞ்சா புகைத்து விட்டு, சரண் சிங்கை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

 



 

இதேபோல கடந்த 3 தினங்களுக்கு முன்பு விஷ்ணு வளர்த்து வந்த வளர்ப்பு நாய், சரண்சிங் வீட்டருகே தொடர்ந்து கத்திக்கொண்டு இருந்துள்ளது. அதேபோல விஷ்ணுவின் பாட்டியும் தொடர்ந்து, நள்ளிரவில் பாக்கு இடித்து சத்தம் எழுப்பி உள்ளார். அப்போது சரண்சிங் அவர்களிடம் வளர்ப்பு நாயை வேறு ஏதாவது இடத்தில் கட்டி வையுங்கள், நள்ளிரவில் ஏன் இவ்வாறு சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என கேள்வி எழுப்பி உள்ளார். இதனை தொடர்ந்து தான் இந்த கொலை சம்பவம் நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதுதொடர்பாக சிவகாஞ்சி காவல் ஆய்வாளர் விநாயகம் நேரில் விசாரணை செய்து, கொலை செய்த விஷ்ணு , தாயார் சித்ரா, தம்பி சிவா ஆகிய மூன்று பேர்களையும் மருத்துவமனையில் வைத்து கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.