நாட்டின் புகழ்பெற்ற உயர் கல்வி நிலையங்களான ஐஐடி போன்றவற்றில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இது ஜேஇஇ முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வு என இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. ஜேஇஇ முதல்நிலை தேர்வு, கணினி வழியாக நாடு முழுவதும் நடத்தப்பட்டது. சுமார் 10 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர்.


கடந்த 2021ஆம் ஆண்டு, லட்சகணக்கான மாணவர்கள் எழுதிய இந்த தேர்வு முடிவுகளில் மோசடி நடந்துள்ளதாக மத்திய புலனாய்வு அமைப்பு இன்று தெரிவித்துள்ளது. மோசடிக்கு காரணமான ரஷியாவை சேர்ந்த நபரிடம் விசாரணை செய்து வருவதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.






கடந்த 2021 ஆம் ஆண்டில், உலகப் புகழ்பெற்ற டிசிஎஸ் நிறுவனம் உருவாக்கிய தேர்வுக்கான மென்பொருளை ரஷியரான மிகைல் ஷார்கின் ஹேக் செய்ததாக சிபிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மேலும், கஜகஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்து இறங்கிய ஷார்கின் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.


கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த தேர்வில் மோசடி செய்ததற்காக ஷார்கின் தேடப்பட்டு வருவது விமான நிலைய அலுவலர்களுக்கு தெரியும். ஜேஇஇ முதல்நிலை தேர்வுக்கான தளமாக இருந்த டிசிஎஸ் மென்பொருளை ஹேக் செய்து, தேர்வெழுதும் விண்ணப்பதாரர்களின் கணினி முனையங்களைக் அவர் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.


ஷார்கின் ஹேக்கிங் செய்ததன் மூலம், மாணவர்கள் ஏமாற்ற முடிந்தது. குறிப்பிட்ட மாணவரின் கணினி வழியாக அவருக்கு பதிலாக வேறொருவர் தேர்வை எழுத இந்த ஹேக்கிங் பயன்பட்டுள்ளது.


உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் அமைந்துள்ள அஃபினிட்டி எஜுகேஷன் என்ற தனியார் பயிற்சி நிறுவனத்தின் ஊழியர்களுக்கு மாணவர்கள் தலா 12 முதல் 15 லட்சம் வரை வழங்கி வினாவுக்கு பதில் எழுத வைத்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடியில் பல வெளிநாட்டவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.


20 மாணவர்கள் ஏமாற்றியதாக நம்பப்பட்டு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தேர்வெழுத அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு, பல்வேறு நகரங்களில் சோதனை நடத்தி சிபிஐ வழக்குப் பதிவு செய்து, மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட மடிக்கணினிகள் மற்றும் பிற உபகரணங்களை பறிமுதல் செய்தது.