கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்னை ஏற்படுவது வழக்கம். ஆனால் அந்தப் பிரச்னை சில நேரங்களில் கொலை வர சென்றுவிடுகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடைபெற்றுள்ளது. அதில் கணவரை மனைவி ஒருவர் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி தூக்கி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மத்திய பிரதேசத்தின் இந்தோர் பகுதியில் பப்லூ ஜாதோன் என்ற டிரைவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருந்துள்ளார். இவருக்கும் இவருடைய மனைவி சுனிதாவிற்கும் அடிக்கடி பிரச்னை ஏற்படும் என்று கருதப்படுகிறது. இந்தச் சூழலில் கடந்த 5 ஆம் தேதி மனைவி சுனிதா கணவருடன் நடந்த தகராறில் கொலை செய்ததாக தெரிகிறது. 


இந்தக் கொலை தொடர்பாக யாருக்கும் வெளியே தெரியாமல் இருந்துள்ளது. அப்போது பப்லூ ஜாதோனின் மகன் மது குடித்த போது தன்னுடைய நண்பரிடம் இந்தச் சம்பவம் தொடர்பாக கூறியுள்ளார். அதில், “நீ என்னை தொந்தரவு செய்தால் என்னுடைய தாய் எப்படி கொலை செய்தாரோ அதேபோல் உன்னையும் கொலை செய்துவிடுவேன். அத்துடன் உடம்பு உறுப்புகளை துண்டு துண்டாக வெட்டி வீசிவிடுவேன். அப்போது உன்னை கொலை செய்தது யாருக்கும் தெரியாது. என் தாய் தற்போது அப்படி கொலை செய்து தான் யாருக்கும் தெரியாமல் இருக்கிறார்” எனக் கூறியுள்ளார். 




அவரின் நண்பர் இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் சுனிதாவை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சுனிதா தன்னுடைய கணவரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அவருக்கு முதலில் உணவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். அதன்பின்னர் அவர் சுயநினைவை இழந்த பிறகு தன்னுடைய நண்பர்கள் ரிஷ்வான் கான் மற்றும் பைஜூ ஆகிய இருவரின் உதவியுடன் உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார். அதன்பின்னர் அந்த உடல் உறுப்புகளில் கை மற்றும் கால்களை வனப்பகுதியில் போட்டுள்ளார். தலை மற்றும் உடம்பை களிவு நீர் தொட்டியுள் போட்டுள்ளார். 


இந்தக் கொலைக்கு காரணத்தையும் சுனிதா காவல்துறையினரிடம் கூறியுள்ளார். அதன்படி தன்னுடைய கணவர் தினமும் சண்டை செய்து பிரச்னை கொடுத்துள்ளார். அத்துடன் அவருக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு உள்ளதாக தொடர்ந்து சந்தேகபட்டு வந்துள்ளதாக கூறியுள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்து தன்னுடைய கணவரை கொலை செய்துள்ளார். இந்தக் கொலை சம்பவத்தில் சுனிதா மட்டும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ரிஷ்வான் கான் மற்றும் பைஜூ ஆகிய இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். 




மேலும் படிக்க:கண்ணை மறைத்த கோபம்! பேத்தியால் உயிரிழந்த பாட்டி! பலியான இரு உயிர்கள்!