வடக்கு டெல்லியில் ஏடிஎம் பாதுகாவலரை கொலை செய்து கேஷ் வேனில் ரூ.8 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வடக்கு டெல்லி வசாரிபாத் பகுதியில் ஐசிஐசிஐ வங்கியின் ஏடிஎம் உள்ளது. அந்த ஏடிஎம் மையத்தில் இன்று மாலை 5 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த காவலாளி ஜெய் சிங் வயது 55 என்று தெரியவந்துள்ளது.


சம்பவ இடத்திற்கு காவல்துறை துணை ஆணையர் சாகர் சிங் கல்சி ஆய்வு செய்தார். கொள்ளையில் ஈடுபட்டவர் ரூ.8 லட்சம் பணத்தை எடுத்துச் சென்றதாக சந்தேகப்படுவதாக கூறினார்.


நடந்தது என்ன?


சம்பந்தப்பட்ட ஐசிஐசிஐ வங்கியின் ஏடிஎம் மையத்திற்கு மாலை 4.50 மணியளவில் பணத்துடன் வேன் வந்துள்ளது. அப்போது வேனின் பின்புறமிருந்து வந்த ஒரு மர்ம நபர் வேனின் பாதுகாவலரை துப்பாக்கியால் சுட்டார். இதில் பாதுகாவலர் நிலைகுலைந்து கீழே விழ மர்ம நபர் வேனில் இருந்த ரூ.8 லட்சத்தை எடுத்துச் சென்றார். உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பாதுகாவலர் ஜெய்சிங்கை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.


தலைநகரமும் குற்றங்களும்:


இந்தியாவில் 2021ம் ஆண்டில் 29,000 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2020ம் ஆண்டைவிட 0.3% அதிகம். இவற்றில் பல கொலைகள் “தகராறு”, “தனிப்பட்ட பழிவாங்கல்” அல்லது “(பண) ஆதாயத்திற்காக” நிகழ்த்தப்பட்டவையாகும். அதுவும் தலைநகர் டெல்லியில் 459 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் 478 பேர் கொல்லப்பட்டனர். இரு தரப்பிற்கும் இடையே ஏற்படும் தகராறு காரணமாக 9765 கொலைகள் நடந்துள்ளன. 'தனிப்பட்ட பழிவாங்கல் அல்லது பகை காரணமாக 3,782 கொலைகளும் ஆதாயத்திற்காக 1,692 கொலைகளும் நடந்துள்ளன. 


இந்தியாவில் நடக்கும் குற்றங்கள் தொடர்பான ஆவணங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றம், பலாத்காரம் உள்பட பல்வேறு குற்றங்களை தனித்தனியே மாநிலம் வாரியாக இந்த தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டு வருகிறது.


இந்நிலையில் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 82 பேர் கொலை செய்யப்படுகின்றனர். மக்கள் தொகை அடிப்படையில் கொலை சம்பவங்கள் (ஒரு லட்சம் பேருக்கு எத்தனை கொலைகள்) அதிகபட்சமாக ஜார்கண்ட் மாநிலத்தில் அதிகமாக நடைபெறுகிறது. அதேபோல ஒரு மணி நேரத்திற்கு 11 கடத்தல் சம்பவங்கள் அரங்கேறுகிறது. அதாவது ஒரு நாளுக்கு 264 கடத்தல் சம்பவங்கள் அரங்கேறுகிறது. கடத்தல் சம்பவங்கள் டெல்லியில் தான் அதிகம் நடக்கிறது.


2021ஆம் ஆண்டில் மொத்தம் 29,272 கொலை சம்பவங்களும் அரங்கேறி உள்ளது. இதில் மொத்தம் 30,132 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இது 2020ஆம் ஆண்டை விட 0.3 சதவீதம் (29,193 கொலை சம்பவங்கள்) அதிகம் ஆகும். கடந்த 2021இல் 1,01,707 கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. அதில் 1,04,149 பேர் கடத்தப்பட்டு உள்ளனர். இது கடந்த 2021இல் பதிவானதை விட 19.9% (84,805 வழக்குகள்) அதிகமாகும்.