கோவா கடற்கரையில் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் சுற்றுலா பயணிகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களை கொண்ட மாநிலங்களில் ஒன்று கோவா மாநிலம். பரப்பளவில் சிறிய மாநிலம் என்றாலும், ஆண்டுதோறும் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை என்பது மிக அதிகம். வாழ்க்கையில் ஒருமுறையாவது கோவாவை கண்டு விட வேண்டும் என நினைப்பவர்களின் சொர்க்க பூமியாக திகழும் அந்த மாநிலத்தில் நடைபெற்றுள்ள கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


அங்கு செயல்பட்டு வரும்  ஆடம்பர விடுதி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வரும் கௌரவ் கட்டியார் என்பவருக்கு, கடந்த ஓராண்டுக்கு முன் திக்‌ஷா கங்குவார் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களின் மண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே பிரச்சினை வெடித்தது. குறிப்பாக கௌரவ் கட்டியாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக திக்‌ஷா சண்டை போட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. 


இப்படியான நிலையில் ஒரு கட்டத்தில் மனைவி சண்டையால் வெறுப்படைந்த கௌரவ், அவரை கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். தனது திட்டப்படி நேற்று முன்தினம் மதிய நேரத்தில் திக்‌ஷாவை அழைத்துக் கொண்டு கடற்கரைக்கு சென்றுள்ளார். அவரை கடலில் மூழ்கடித்து கொலை செய்ததோடு மட்டுமல்லாமல், தான் அருகில் இல்லாதபோது திக்‌ஷா அலையில் சிக்கி மூழ்கி விட்டதாக அங்கிருந்தவர்களிடம் தெரிவித்து நாடகமாடியுள்ளார். 


இதனையடுத்து போலீசார் வந்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது கோவாவுக்கு வருகை தந்திருந்த சுற்றுலா பயணி எடுத்த வீடியோ மூலம் கௌரவ் வசமாக சிக்கிக் கொண்டார். அதாவது அதில் கௌரவ் கடற்கரையில் இருந்து வெளியே வந்து விட்டு மீண்டும் கடற்கரைக்கு செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் கௌரவிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் மனைவி திக்‌ஷா கங்குவாரை கடற்கரையில் பாறைகள் நிறைந்த பகுதிக்கு அழைத்துச் சென்று கடலில் மூழ்கடித்துள்ளார். பின்னர் வெளியே வந்து விட்டு மனைவி இறந்து விட்டாரா என்பதை அறிய மீண்டும் உள்ளே வந்துள்ளார். 


இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் கௌரவ்வை கைது செய்தனர். மேலும் இவரும், இறந்து போன திக்‌ஷாவும் லக்னோ மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




மேலும் படிக்க: உதகையில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் ; பொதுமக்கள் சாலை மறியல்