கோவாவை உலுக்கிய கொலை வழக்கு:


 கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுசானா சேத், தனது 4 வயது குழந்தையை கொன்றதாக ஜனவரி 9ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.  


சுசானா சேத்தை காவலில் எடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 6 நாட்கள் காவலில் வைக்கப்பட்டிருந்த சேத், கோவா குழந்தைகள் நீதிமன்றத்தில்  நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டார்.


பின்னர், இவரை மேலும் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  இவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்தப்பட்டு வரும் நிலையில்,  சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.


மகன் உடலுடன் 19 மணி நேரமாக இருந்த பெண்  சிஇஓ


சுசானா சேத் தனது மகனை ஹோட்டலுக்கு சென்ற 2 மணி நேரத்திலேயே கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், "சுசானா சேத், டிசம்பர் 31ஆம் தேதி முதல் ஜனவரி 4ஆம் தேதி வரை 5 நாட்கள் ஹோட்டலில் இருந்துள்ளார்.


பின்னர், ஜனவரி 4ஆம் தேதி பெங்களூரு சென்றுவிட்டு, ஜனவரி 6ஆம் தேதி மாலை கோவா திரும்பியுள்ளார். அதே நாளில், இரவு 11.30 மணிக்கு ஹோட்டலுக்கு சென்ற அவர், இரண்டு மணி நேரத்திலேயே குழந்தையை கொன்றிருக்கிறார். பின்னர், அதே அறையில், குழந்தையின் உடலுடன் கிட்டதட்ட 19 மணி நேரம் இருந்துள்ளதாக" விசாரணையில் தெரியவந்துள்ளது. 


மேலும், ஜனவரி 7 அன்று பகல் முழுவதும் சுசானா சேத் யாருக்கும் போன் செய்யவோ அல்லது மெசேஜ் செய்யவோ இல்லை. அதே நாளில், இரவு 11:45 மணியளவில், ஹோட்டல் ஊழியரை அழைத்து, தனக்காக ஒரு வண்டியை முன்பதிவு செய்ய கூறியிருக்கிறார். பின்னர், ஹோட்டல் ஊழியரும் கார் புக் செய்து புறப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.


நடந்தது என்ன?


மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் சுசானா சேத். இவர் பெங்களூருவில் ஏஐ நிறுவனத்தை நடத்தி வந்தார். இவருக்கு கடந்த 2010ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. இவரது கணவர் வெங்கட்ராமன். இந்த தம்பதிக்கு கடந்த 2019ல் ஆண் குழந்தை பிறந்தது.


இந்த நிலையில், தான் கருத்து வேறுபாடு காரணமாக சுசனா சேத், வெங்கட்ராமன் பிரிந்துள்ளனர். சுசனா கடந்த 2020ல் கணவரை விவாகரத்து செய்ததாக தெரிகிறது. அப்போது, குழந்தையை ஞாயிற்றுக்கிழமைகளில் பார்க்க கணவருக்கு கோர்ட் அனுமதி அளித்ததாக தெரிகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குழந்தையை பார்க்க கணவர் வந்து செல்வதை சுசானா விரும்பவில்லை என்று தெரிகிறது. இதனால், குழந்தையுடன் கோவாவிற்கு அழைத்து சென்றிருப்பதாக தெரிகிறது. 


கோவாவில் உள்ள ஹோட்டலில் தங்கிய சுசானா சேத் தனது 4 வயது மகனை கொன்று உடலை பேக்கில் வைத்து வாடகை காரில் பெங்களூரு நோக்கி வந்தபோது போலீசாரால் கைதானார்.  கைதான சுசானா சேத்திடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.