சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள புதுப்பட்டியலில் வழிவிடுமுருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இதில் திடீரென ஏற்பட்ட விபத்தில்  4 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்த நிலையில் எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பட்டாசுகள் வெடித்து இரண்டு அறைகள் தரைமட்டமான நிலையில் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 30 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது பட்டாசுகள் வெடித்து சிதறியதால் விபத்து என தகவல் வெளியாகி உள்ளது.




 





இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், " வழிவிடுமுருகன் என்பவரது பட்டாசு ஆலையில் அதிகளவு ஃபேன்சி ரக பட்டாசு தயார் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 2 நபர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

 

 







 

இந்த பட்டாசு ஆலை வழிவிடு முருகன் என்பவர் மூலம் நடத்தப்படுகிறதா, அல்லது வேறு சில ஒப்பந்தகாரர் மூலம் நடத்தப்படுகிறதா என விசாரணை நடைபெறுகிறது. முழு விசாரணைக்கு பின்பு தான் எத்தனை நபர் இறந்துள்ளனர். எத்தனை நபர்களுக்கு காயம் என தெரியவரும்" என்றனர்.

 

2022-ம் ஆண்டின் முதல் நாளான இன்று புத்தாண்டு தினத்தில் சோகத்தை ஏற்படுத்தும் விதமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.