கோவையில் மோசடி புகாரின் பேரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கத்தின் மருமகன் அருண் பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை காளப்பட்டி பகுதியை சேர்ந்த பெண் தொழிலதிபர் சிந்துஜா (33). இவர் நவ இந்தியா பகுதியில் சாக்லேட் கடை நடத்தி வருகிறார். சிந்துஜாவிற்கு திருமணம் நடந்து விவகாரத்து பெற்ற நிலையில், பெற்றோருடன் வசித்து வருகிறார். இதனிடையே சிந்துஜாவிற்கும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கத்தின் மருமகன் அருண்பிரகாஷ்க்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்து தொழில் செய்யலாம் என முடிவு எடுத்துள்ளனர். இதற்காக சிந்துஜாவின் தந்தை செங்குட்டுவன் அருண் பிரகாஷ்க்கு ஒன்றரை கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் சொன்னபடி தொழில் துவங்கதோடு, பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதாகவும், அருண் பிரகாஷ் கொடுத்த இரண்டு காசோலைகளையும் பணம் இல்லாமல் திரும்பி வந்ததாகவும் செங்குட்டுவன் கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மாநகர குற்றப்பிரிவு காவல் துறையினர் அருண் பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதற்கு முன்பாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் கடந்த ஜீலை மாதம் சிந்துஜா புகார் ஒன்றை அளித்தார். அதில் வால்பாறை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கத்தின் மருமகன் அருண் பிரகாஷ் (41), தொழில் பர்டனராக இருந்ததாகவும்,  தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 7 ஆண்டுகளாக வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 7 கோடி ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்ததாகவும், பணத்தை திருப்பி கேட்டபோது, கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார் தெரிவித்து இருந்தார். மேலும் அவருடன் சேர்ந்து, கோவை தங்கமும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், கடந்த ஜீலை 12 ம் தேதி அருண் பிரகாஷ், விக்னேஷ், இக்னேஷ் ஆகியோர் சிந்துஜா வீட்டிற்கு சென்று, அவரையும், அவரது பெற்றோர்களையும் தாக்கியதாக புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கத்தின் மருமகன் அருண் பிரகாஷ் மற்றும் விக்னேஷ், இக்னேஷ் ஆகிய மூவர் மீது காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல், ஏமாற்றுதல் ஆகிய 3 பிரிவுகளில் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.


தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவராக கோவை தங்கம் இருந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வால்பாறை தொகுதியில் போட்டியிட சீட் கிடைக்காத அதிருப்தியில், அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க. வில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.